தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு இருவர் பலி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு இதுவரை இருவர் பலியாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பெய்த கனமழையால் தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாதசாரிகள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அளவுக்கு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மாவட்டத்தின் பல இடங்களில் மழைக்கு வீடுகள் இடிந்துள்ளன. இது வரை 7 வீடுகள் முழு்மையாகவும், 2 வீடுகள் பகுதியளவும் இடிந்துள்ளன.
மேலும் மழையின் போது மின்னல் தாக்கயதில் 3 கால்நடைகள் பலியாகின. திருச்செந்தூர் அருகேயுள்ள வெள்ளமடத்தைச் சேர்ந்த சித்திரை கனி, காட்டு முகமதுபள்ளியைச் சேர்ந்த சுப்புராஜ் ஆகிய இருவர் இடி தாக்கியதில் பலியாகினர். மழை சேதம் குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளங்கள், ஏரிகளில் நீர் நிரம்பத் துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.