காஷ்மீர் போராட்டத்தை ஆதரியுங்கள்-முஸ்லீம்களுக்கு ஈரான் மதத் தலைவர் அழைப்பு
டெஹ்ரான்: உலகெங்கும் உள்ள முஸ்லீம் அறிஞர்கள், காஷ்மீரில் நடந்து வரும் போராட்டத்திற்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என ஈரான் நாட்டின் மதத் தலைவரான அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
மேலும் காஷ்மீரை தனி நாடு போலவும் அவர் வர்ணித்துள்ளார்.
ஹஜ் யாத்ரீகர்களுக்கு அவர் இதுதொடர்பாக விடுத்துள்ள செய்தியில்,
இஸ்லாமிய அறிஞர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கம் இன்று ஒரு முக்கியக் கடமை காத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கும், முற்றுகைக்குள்ளாகியிருக்கும் காஜா மக்களுக்கும் நீங்கள் உதவ வேண்டும்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், காஷ்மீர் ஆகிய நாடுகளை ஐ.நா. மற்றும் இஸ்ரேலின் நெருக்குதலிலிருந்து காக்க வேண்டும். அங்கு நடந்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
முஸ்லீம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கமேனி.
ஈரான் மதத் தலைவராக இருந்தவரான அயத்துல்லா அலி கொமேனி மறைந்த பின்னர் மதத் தலைவர் பதவிக்கு உயர்ந்தார் கமேனி. இவர் ஈரானின் முன்னாள் அதிபரும் ஆவார். ஈரான் அதிபர் மகமது அகமதினேஜத்தின் தீவிர ஆதரவாளரும் கூட.
80களில் கமேனி ஜம்மு காஷ்மீர் வந்துள்ளார். ஸ்ரீநகரில் உள்ள ஜும்மா மசூதியில் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கடும் கண்டனம்:
கமேனியின் இந்தப் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ஈரான் தூதர், மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரிடம், இந்தியாவின் கடும் கண்டனத்தை, வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் (ஈரான் விவகாரம்) யாஷ் சின்ஹா தெரிவித்தார்.