தமிழகத்தில் 1.6 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு
நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் 1.6 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவ சிறப்பு அறக்கட்டளை தொடங்கி செயல்பட்டு வருவதாக மாநில திட்ட இயக்குனர் அமுதா தெரிவித்தார்.
உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இளைஞர்கள் மத்தியில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் குமரி முதல் சென்னை வரை தொடர் சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. இந்த பேரணி நேற்று நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகில் இருந்து தொடங்கியது. கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் அமுதா சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் 1.6 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் தான் அதிகம். எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக சிறப்பு அறக்கட்டளை கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த அறக்கட்டளைக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி வைப்பு நிதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையை கொண்டு இக்குழந்தைகளுக்கு தேவையான கல்வி, ஊட்டச்சத்து மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்த அறக்கட்டளைக்கு தேவையான நிதி திரட்டும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
நாட்டிலேயே முதன் முறையாக நமது மாநிலத்தில்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 1595 குழந்தைகள் இந்த அறக்கட்டளையின் மூலம் பயன் அடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.