கார்த்திகை பௌர்ணமி: ஆறு, குளங்களில் பக்தர்கள் புனித நீராடினர்-14 பேர் நீரில் மூழ்கி பலி
டெல்லி: நேற்று கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு நாடு முழுவதும் ஆறு மற்றும் குளங்களில் புனித நீராடிய 14 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று கார்த்திகைப் பௌர்ணமி நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் ஆறு மற்றும் குளங்களில் புனித நீராடினர். அப்போது 14 பேர் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்தனர். இதில் ஒரிசாவில் 10 பேரும், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் தலா 2 பேரும் பலியாகினர். ஒரிசாவில் இறந்த 10 பேரில் 9 பேர் குழந்தைகள்.
புனித நகரமான அயோத்தியில் பக்தர்கள் சரயு நதியில் நீராடினர். பிரபல கோவில்களான கனக் பவன், ஹனுமன்கர்ஹி உள்ளிட்ட ஆலயங்கள் கார்த்திகை தீபங்களால் ஜொலித்தன.
பிரயாக், ஹரித்வார், மதுரா, காசி ஆகிய இடங்களில் இருந்து வந்த ஞானிகளும் சரயு நதியில் புனித நீராடினர்.
பைசாபாத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்த கார்த்திகை மேளாவும் நேற்று நிறைவடைந்தது. இந்த விழாவின்போது எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.