டெல்லி வந்தார் எதியூரப்பா-ராஜினாமா கடிதம் தரவில்லை என்று அறிவிப்பு
இன்று முற்பகல் 11 மணிக்குள் ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் விடுத்த உத்தரவை நிராகரித்து விட்ட கர்நாடக முதல்வர் எதியூரப்பா, காலை புட்டபர்த்திக்குச் சென்று சாய்பாபாவை தரிசித்தார்.
பின்னர் அங்கிருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணவோ தேவி ஆலயத்துக்கு புறப்பட்டுச் செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் புட்டபர்த்தியிலிருந்து நேராக டெல்லிக்குச் சென்றார்.
புட்டபர்த்திக்கு சாய்பாபாவை தரிசிக்க வந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் விமானத்திலேயே எதியூரப்பாவும் டெல்லிக்குச் சென்றார்.
அங்கு பாஜக தலைவர் நிதின் கட்டாரியை அவர் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்பட்டது. அப்போது அவரிடம் ராஜினாமா செய்யுமாறு பாஜக தலைமை கோரும் என்று கூறப்பட்டது.
ஆனால், டெல்லி வந்த எதியூரப்பா, நிதின் கட்காரியை சந்திக்கவில்லை. முதல்வர் பதவியிலிருந்து தான் விலகத் தயாராக இல்லை என்றும், மாறாக மொத்த அமைச்சரவையும் விலகிவிட்டு, ஆட்சியையும் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்றும் பாஜக தலைமைக்கு லேட்டஸ்டாக தகவல் அனுப்பியுள்ளார் எதியூரப்பா. இதனால் பாஜக தலைமை கடுப்பாகியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் எதியூரப்பா பேசுகையில், நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று யாரும் என்னைக் கேட்கவில்லை. நானும் ராஜினாமா கடிதம் கொடுக்க வரவில்லை. கட்சித் தலைவர்களை பார்ப்பேன் என்றார் எதியூரப்பா.
தனிக் கட்சி தொடங்குவாரா?
தன்னை முதல்வர் பதவியை விட்டு நீக்கினால், கட்சியை விட்டு விலகவும் பாஜகவை உடைத்து தனிக் கட்சி தொடங்கவும் எதியூரப்பா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவியுள்ளன.
மேலும் சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளத்தி்ல் அவர் இணையவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந் நிலையில் கர்நாடகத்தில் உள்ள பிராமண மற்றும் எதியூரப்பா சார்ந்த முற்பட்ட சமூகமான லிங்காயத்துக்கு சமூகத்தைச் சேர்ந்த மடாதிபதிகள் அவருக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேற்று டெல்லியில் நடந்த கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டும் எதியூரப்பா போகவில்லை. இன்று முற்பகல் 11 மணிக்குள் முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு கட்சி மேலிடம் பிறப்பித்த உத்தரவையும் அவர் நிராகரித்து விட்டார். மாலையில் டெல்லி சென்றாலும் பாஜக தலைவர்களை அவர் சந்தி்க்க மறுத்து வருகிறார்.
அதேச்யம், அவரது வலது கரமான முக்கிய அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா காலையிலேயே டெல்லிக்குச் சென்றுவிட்டார்.
தனக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார் எதியூரப்பா. ஆனால் அவருக்கு 15 முதல் 30 எம்எல்ஏக்களின் ஆதரவே இருப்பதாக அவரது கட்சினரே கூறுகின்றனர்.
எதியூரப்பா கட்சியை உடைத்தால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அத்தோடு முடிந்து போகும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
அதேசமயம், கட்சி உடையாமல் ஆட்சி கலையாமல் கவனமாக செயல்பட பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். எதியூரப்பாவை தாற்காலிமாகவாவது பதவி விலகுமாறு கட்காரி கோருவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே, டெல்லி வந்த அமைச்சர் ஆச்சார்யா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், எதியூரப்பா தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். அவருக்கு மாற்றான தலைவர் யாரும் இல்லை. இதுவரை பாஜக மேலிடம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றார்.
ஆச்சார்யாவுடன் வந்துள்ள இன்னொரு எதியூரப்பா ஆதரவு அமைச்சரான அசோக், கட்காரியை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடககத்தில் ஒரு நெருக்கடியும் இல்லை. எதிர்க்கட்சிகள்தான் தேவையில்லாமல் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று அல்லது நாளைக்குள் பிரச்சனை தீர்க்கப்பட்டு விடும் என்றார்.
எதியூரப்பாவுக்கு எதிராக சுஷ்மா சுவராஜ்?:
இதற்கிடையே, எதியூரப்பாவுக்கு எதிராக சுஷ்மா சுவராஜ் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரது உத்தரவின் பேரில், ரெட்டி சகோதரர்கள், எதியூரப்பாவுக்கு எதிராக ரகசியமாக செயல்பட்டு வருவதாகவும், எதியூரப்பாவுக்கு எதிரான விஷயங்களை வெளியில் விட்டு வருவதாகவும் நம்பப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று ஒரு சிடி வெளியாகியது. அதில், சுற்றுலாத்துறை அமைச்சரான ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி, அரசைக் கவிழ்ப்பது குறித்து அசோக் சர்மா என்பவருடன் பேசுகிறார். இந்த பேச்சின்போது பணப் பரிவர்த்தனை தொடர்பாகவும் விவாதிக்கப்படுவதாக காட்சிகள் உள்ளன.
இதை ஒரு கன்னடத் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியது. ஆகஸ்ட் 11ம் தேதி இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எதியூரப்பாவை நீக்க முயலுங்கள் என்று அசோக் சர்மாவிடம் ஜனார்த்தன் ரெட்டி கூறுகிறார். மேலும், புதிய முதல்வர் வர வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்றும் சர்மாவிடம் ரெட்டி கூறுகிறார்.
மேலும், அதற்காக ரூ. 15 கோடி பணம் தருவதாகவும் ரெட்டி கூறுகிறார்.
ரெட்டி சகோதரர்கள், சுஷ்மா சுவராஜுக்கு நெருக்கமானவர்கள். சுஷ்மா சுவராஜ் முன்பு சோனியாவை எதிர்த்து பெல்லாரியில் போட்டியிட்டபோது முழுச் செலவையும் இந்த ரெட்டிகள்தான் ஏற்றுக் கொண்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு எதியூரப்பாவுக்கு எதிராக ரெட்டி சகோதரர்கள் போர்க்கொடி உயர்த்தியபோது சுஷ்மாவை விட்டுத்தான் அவர்களை அடக்கியது பாஜக மேலிடம்.
எனவே தற்போது எதியூரப்பாவுக்கு எழுந்துள்ள பிரச்சனைக்குப் பின்னால் சுஷ்மா சுவராஜ் இருக்கலாம் என எதியூரப்பா தரப்பு சந்தேகப்படுகிறது. மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மீதும் எதியூரப்பா தரப்பு கடும் கோபத்தில் உள்ளது. பிராமண சமூகத்தைச் சேர்ந்த இவரும் எதியூரப்பாவின் முதல்வர் பதவியைப் பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறார்.