சாய்பாபா பிறந்த நாள்விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் நேற்று நடந்த இந்த விழாவில் தமிழக அரசின்சார்பாக ஸ்டாலின் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்ய சாய் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்காகவே ஸ்டாலின் சென்றதாகவும், துணை முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சாய்பாபாவை சந்தித்துஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், கூவம் ஆற்றை சீரமைக்குப் பணிகளுக்கு சாய்பாபா செய்யவுள்ள உதவி தொடர்பாக அவருடன் ஆலோசித்தார்.
ஏற்கனவே சத்ய சாய் அறக்கட்டளை மூலம் கிருஷ்ணா கால்வாய் புதுக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதே போல தற்போது கூவம் ஆற்றை சீரமைக்கவும் சாய்பாபாவின் உதவியை தமிழக அரசு நாடியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சாய்பாபா சென்னை வந்திருந்தார். அப்போது முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கருணாநிதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மோதிரங்களை வரவழைத்துக் கொடுத்து அசத்தினார். இதைப் பார்த்து வியந்து போன அமைச்சர் துரைமுருகன் தனக்கும் ஒன்று என்று கேட்க அவருக்கும் மோதிரத்தை வரவழைத்துக் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.