தாத்தா காரை ரூ. 3. 22 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ராஜ குடும்பத்துப் பேரன்
ராஜ்காட்: ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் 76 ஆண்டுகளுக்கு முன் தனது தாத்தா வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை ரூ.3.22 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார்.
குஜராத் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் மன்தத்தா சிங் ஜடேஜா. அவரது தாத்தாவின் காரில் மகாத்மா காந்தியும், இங்கிலாந்து ராணியும் பயணம் செய்துள்ளனர்.
மேலும், அது பல சரித்திர சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. ராஜ குடும்பத்தால் பின்னர் அந்தக் கார் விற்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அந் கார் கனடாவில் ஏலத்தில் விடப்பட்டது. அதை ஜடேஜா தனது தாத்தா நினைவாக ரூ. 3.22 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நான் ரூ.3. 22 கோடி கொடுத்து அந்த வின்டேஜ் காரை வாங்கிவிட்டேன். ஆன்டாரியோவில் அன்மையில் நடந்த கண்காட்சியின்போது டொரண்டோ ஆர்ட் கேலரியில் அது வைக்கப்பட்டிருந்தது.
எனது தாத்தா தர்மேந்திரசிங்ஜியின் காரை திரும்பக் கொண்டுவந்ததில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் நட்சத்திரம் (ஸ்டார் ஆப் இந்தியா) என்று அழைக்கப்படும் சரித்திர தொடர்புடைய அதை மீண்டும் அதன் இடத்திலேயே வைக்கப் போகிறேன்.
ராஜ்கோட்டின் மன்னராக இருந்த தர்மேந்திரசிங் ஜடேஜா வளர்ச்சி மற்றும் ஏழைகளுக்கு உதவியதால் புகழ் பெற்றவர். மகாத்மா காந்தியின் தந்தை கரம்சந்த் காந்தி ராஜ்கோட் மாநிலத்தின் திவானாக இருந்தார்.
எனது தாத்தா கடந்த 1934-ம் ஆண்டு இந்த காரை வாங்கினார். அது கடந்த 1968-ம் ஆண்டு வரை ராஜ குடும்பத்தில் தான் இருந்தது. அதற்கு பிறகே விற்கப்பட்டது என்று அவர் கூறினார்.