வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்தம்-தமிழகத்தில் மழை நீடிக்கும்
சென்னை: வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் தொடருவதால் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வைகை அணை நிரம்பியது. மேலும் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் பெரும் மழையால் தத்தளித்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மையத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
இலங்கையின் மேல்அடுக்கில் வளிமண்டலத்தில் உருவாகி இருந்த காற்று சுழற்சி 3 நாட்களாக தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதற்கிடையில், இலங்கையை ஒட்டியுள்ள வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்யும், ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு திசை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்யலாம் என்றார்.