For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், விலகிக் கொள்கிறோம்-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: நாங்கள் தனியாக பதினாறடி பாய்வோம் என்று சொல்லவில்லை. தனியாக பதினாறடி பாயக்கூடும் என்றுதான் அண்ணா காலத்திலே அப்படிக் கேட்டோம், நாங்கள் தனியாகப் பதினாறடி பாய வேண்டும் என்று. இல்லையில்லை, சேர்ந்தே பதினாறடி பாய்வோம் என்று சொன்ன பிறகுதான் உங்களை நம்பி, சேர்ந்தேயிருக்கிறோம். சேர்ந்தே இருப்பது தீது என்று சொன்னால், சொல்லுங்கள்! யோசிக்கிறோம். அவ்வளவுதான் சொல்ல முடியும் என்று காங்கிரஸுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், வேளாண் கருத்தரங்கம் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

கடந்த சில நாட்களாக எதிர்பார்த்த மழை கொட்டோ கொட்''டென்று கொட்டி, நம்மையெல்லாம் மகிழ வைத்திருக்கிறது. இந்த மழை தொடர்ந்து இன்னும் தன்னுடைய கைவரிசையைக் காட்டுமேயானால், விவசாயிகள், தமிழ்மக்கள், ஏழை எளியவர்கள், குடிசைவாழ் மக்கள் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை நான் உணராதவன் அல்ல.

அதனால்தான், மழை பொழிந்து சேதாரம் ஏற்பட்ட இடங்களில் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளான இடங்களில், விவசாயம் எங்கே பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அத்தகைய இடங்களில் எல்லாம் உடனடியாக துயர்துடைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உறுதுணையாக பணியாற்றுகின்ற அலுவலர்களுக்குப் பின் துணையாக அரசியல் கட்சிகளின் நண்பர்களும் குறிப்பாக ஆளுங்கட்சி நண்பர்கள் அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.

நான் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது, பஞ்சாப் மாநில முதல்வர் குர்னாம் சிங் என்னை பஞ்சாபிற்கு வரவேண்டும் என்று அழைத்தார். பஞ்சாப் மாநிலத்திலே பல பகுதிகளை நானும், மறைந்த முரசொலி மாறனும், மற்றவர்களும், அந்த சுற்றுப்பயணத்திலே ஈடுபட்ட போது, அங்குள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தை பார்வையிட்டோம்.

அதே போன்ற பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோவையிலே வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை அமைத்தோம். அதன் காரணமாகத்தான் அந்தப் பல்கலைக்கழகத்திலே இருந்த மூன்று மாணவிகள் தருமபுரியில் எரித்துக் கொல்லப்பட்ட போது கூட நான் வருத்தப்பட்டேன். அந்த வேளாண்மைப் பல்கலைக் கழகத்தை நாம் ஏன் தொடங்கினோம், தொடங்கிய காரணத்தால் அல்லவா, அந்த மாணவிகள் அங்கே படிக்க நேர்ந்தது, அங்கே படிக்க நேர்ந்த காரணத்தாலல்லவா அவர்கள் சுற்றுலா செல்ல நேர்ந்தது,

சுற்றுலா சென்ற காரணத்தாலல்லவா தருமபுரியிலே அவர்கள் அநியாயக்காரர்களால், வெறியர்களால் உயிரிழக்க நேர்ந்தது என்று நான் கண்ணீர் வடித்தது உண்டு. அப்படிப்பட்ட ஒரு அடையாளத்தைக் கொண்ட அந்தக் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தை நான் மறக்கவில்லை. அங்கே ஏற்பட்ட அந்த துயர நிகழ்ச்சிக்குக் காரணமான அந்த மாணவிகள் படித்த அந்த நிகழ்ச்சியை நான் என்றைக்கும் மறக்கப் போவதுமில்லை.

அப்படிப்பட்ட அந்தப் பல்கலைக்கழகத்தை நான் எண்ணியெண்ணி துன்புற்றிருக்கிற அந்த நேரத்திலேதான், இன்றைக்கு நம்முடைய வீரபாண்டி ஆறுமுகம் பேசும் போது, அவரும் ஒரு பல்கலைக்கழகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அதுதான் தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும் என்பதாகும்.

வீரபாண்டி இங்கே கேட்டுக் கொண்டதைப் போல, நம்முடைய வேளாண் துறை நண்பர்கள் நீண்டகாலமாக விரும்புவதைப் போல, தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தை விரைவில் தொடங்குவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபடும்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், பெருமழை பெய்து நிவாரணப் பணிகளில் கலெக்டர்களும், அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளனர். மழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பயிர்ச்சேதம் ஏற்பட்டு, விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்ட செய்திகளும் வந்து கொண்டுள்ளன. எந்தெந்த பகுதிகள் அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்ற முழு விவரம் அறிந்து, அந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலவரி இந்த ஆண்டு முழுமையாக ரத்து செய்யப்படும்.

இது இந்த அரசுக்குப் புதிதல்ல. 1995-ம் ஆண்டு வறட்சி பாதித்தபோது, 19 மாவட்டங்களில், 13.5.1996 அன்று தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், ரூ.22 கோடியே 30 லட்சம் ரூபாய் அளவுக்கு நிலவரியை ரத்து செய்தது. அப்போது வறட்சிக்காக ரத்து செய்தோம். இப்போது மழை பொழிந்து பாதிக்கப்பட்டிருக்கின்ற வேளாண்துறை மக்களின் துயர் துடைப்பதற்காக இந்த அறிவிப்பை நான் செய்திருக்கிறேன்.

இந்த அரசு திட்டங்களை தீட்டுகிற போது, இந்த அரசு என்று நான் குறிப்பிடும்போது சில பேர் தமிழ்நாட்டில், நான் ஏதோ மாநில அரசை, தமிழக அரசை மாத்திரம்தான் குறிப்பிடுகிறேன் என்று கருதிக்கொண்டு, மத்திய அரசுக்கு இதில் பங்கு கிடையாதா என்றெல்லாம் கேட்கிறார்கள். மத்திய அரசு என்று எதைச் சொல்லுகிறோம், அது மாத்திரமல்ல, இந்த நாட்டில் எந்தக் கட்சிக்காரர்களும் சொல்லாத வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன்.

மத்திய அரசு என்கிற போது, மத்திய அரசு என்று மாத்திரம் சொல்லுவதில்லை, இந்தியப் பேரரசு என்று சொல்லுகிறேன். பேரரசு என்றாலே இந்த அரசும் உள்ளிட்டதுதான், அதுதான் பேரரசு. நாங்கள் சிற்றரசுதான். இந்த சிற்றரசுகள் எல்லாம் அடங்கியதுதான் பேரரசு. நாங்கள் ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்றால், மக்களுக்காக ஒரு சாதனை புரிகிறோம் என்றால், மக்களுக்காக ஒரு செயலை முடிக்கிறோம் என்றால், அவர்களுக்காக ஒரு திட்டத்தை வகுக்கிறோம் என்றால், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்றால், அதிலே மத்திய அரசை விட்டுவிட்டு செயல்படுத்துவதில்லை.

இன்னும் சொல்லப்போனால், அவர்கள் எட்டடி பாய்ந்தால் நாங்கள் பதினாறடி பாய்வோம். அந்த எட்டைக் கூட்டித்தான் பதினாறு - நான் அதை மறக்கவில்லை. அந்த எட்டடியையும் கூட்டித்தான் பதினாறடி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் கணக்கிலே அவ்வளவு முட்டாள் அல்ல. அந்த எட்டடியோடு சேர்த்துதான் பதினாறடி பாய்வோம் என்று நான் சொல்லுகிறேன்.

நாங்கள் தனியாக பதினாறடி பாய்வோம் என்று சொல்லவில்லை. தனியாக பதினாறடி பாயக்கூடும் என்றுதான் அண்ணா காலத்திலே அப்படிக் கேட்டோம், நாங்கள் தனியாகப் பதினாறடி பாய வேண்டும் என்று. இல்லையில்லை, சேர்ந்தே பதினாறடி பாய்வோம் என்று சொன்ன பிறகுதான் உங்களை நம்பி, சேர்ந்தேயிருக்கிறோம். சேர்ந்தே இருப்பது தீது என்று சொன்னால், சொல்லுங்கள்! யோசிக்கிறோம். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

திராவிட நாடு, தமிழ் நாடு என்றெல்லாம் ஒரு காலத்திலே கேட்ட போது, தமிழ்நாடு தனி, தமிழ்நாட்டின் திட்டங்கள் தனி, பக்கத்து நாடுகளின் திட்டங்கள் தனி, என்ற அந்த அளவிலேதான் எங்களுடைய உரிமை, எங்களுடைய பொருளாதாரத்திற்கு ஏற்ற, பயன்பாடுகளுக்கு ஏற்ற திட்டங்கள் இவற்றை எல்லாம் எங்களுக்குத் தேவை என்ற முறையிலேதான் தி.மு.க. அரசு தொடக்க காலத்தில் அந்தக் கருத்தை வெளியிட்டது. அப்படிச் சொன்ன போது, எங்களுக்கு அளிக்கப்பட்ட அறிவுரை என்ன?

நாமெல்லாம் ஏக இந்தியா அல்லவா? ஒரே இந்தியா அல்லவா? நாங்கள் போடுகிற திட்டங்களும், நீங்கள் போடுகிற திட்டங்களும் மக்களுக்குப் பயன்படக்கூடியவை அல்லவா? என்று கேட்டு நாங்களும் யோசித்து, ஆமாம்! எங்களால் அதைப் பங்கிட்டுக் கொள்ள முடியவில்லை என்று கேட்ட போது, அதைப் பங்கிட்டுக் கொள்ளக்கூடிய அளவிற்கு நாங்கள் பயனளிக்கிறோம் என்று சொன்ன போது, அதை நம்பித்தான் ஒன்றாக இருக்கிறோம்.

ஒன்றாக இருப்பதற்குக் காரணமே, நீங்கள் எங்களை என்றைக்கும் வளத்தோடு வாழவைப்பீர்கள் - ஒரு பகுதி வாழ்வதும், ஒரு பகுதி வீழ்வதும் என்ற நிலைமை இந்தியாவிலே இருக்காது. இந்தியா சமமாக இருக்கும். இந்தியாவிலே எல்லா பாகங்களும் சமமாக இருக்கும். ஒரு பாகம் உயர்ந்து, ஒரு பாகம் நலிந்திருக்கக்கூடிய நிலைமை இந்திய நாட்டிலே இருக்காது என்று எண்ணித்தான், நம்பித்தான் இன்றைக்கு தென்னகப் பகுதி, தமிழகப் பகுதி வடக்கே உள்ள பகுதிகளோடு கலந்திருக்கிறது.

ஆனால், இந்தியாவின் ஒருமைப்பாடு, இந்தியாவின் ஒற்றுமை இவைகளெல்லாம் தமிழர்களுக்கு மாத்திரம்தானா என்றால், இல்லை. நாங்களும், நீங்களும் சேர்ந்துதான் இந்தியர்கள். நாங்கள் மாத்திரம் என்றால் தமிழர்கள் அல்லது திராவிடர்கள். நாங்களும் நீங்களும் சேர்ந்துதான் இந்தியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்தியர்களுக்காகத் தீட்டப்படுகிற திட்டம். அது எந்தத் திட்டமாக இருந்தாலும், இந்தியாவிலே இருக்கின்ற எல்லா மக்களும் பயன்பெறவேண்டிய திட்டம். இந்தியாவிலே இருக்கின்ற தெலுங்கர்களுக்கான திட்டம் என்றால் அது தனியாக இருக்கலாம். இந்தியாவிலே இருக்கின்ற கன்னடியர்களுக்கான திட்டம் என்றால் அது தனியாக இருக்கலாம். இந்தியாவிலே இருக்கின்ற பஞ்சாபிகளுக்கான திட்டம் என்றால் அது தனியாக இருக்கலாம்.

ஆனால், எல்லாம் சேர்ந்த இந்தியர்களுக்கான திட்டமென்றால், அதிலே பாகுபாடு இருக்க முடியாது, இருக்கக்கூடாது. இருந்தால், இந்தியாவிலே பல மாநிலங்களை, பல பிரதேசங்களை, பல இனங்களை அனுமதித்த குற்றத்திற்கு நாம் ஆளாவோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அந்த வகையிலே இது யாருடைய திட்டம், இது மாநில அரசின் திட்டமா? மத்திய அரசின் திட்டமா? என்றெல்லாம் சில பேர் குழப்புகிறார்கள்.

மாநில அரசின் திட்டங்கள் எல்லாம் மத்திய அரசின் திட்டங்களாகத்தான் இன்றைக்கு இருக்கின்றன என்று யாராவது சொல்லுவார்களேயானால், மாநில அரசுத் திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள்தான் என்று மக்களைக் குழப்ப முன் வருவார்களேயானால், நான் அவர்களுக்குச் சொல்லுகிறேன் - நாங்கள் திட்டவட்டமாக, தெளிவாக இதிலே இருப்பதற்கு எங்களுக்கு தயவு செய்து வழிவிடுங்கள். இதைத்தான் நான் சொல்ல முடியும்.

மத்திய அரசு வேறு, மாநில அரசு வேறு என்று நான் கருதாத காரணத்தால், இரண்டும் ஒரே அரசுதான் - மத்தியிலே ஒரு காரியம் நடந்தால் அது மாநிலங்களைப் பாதிக்கக்கூடியதுதான் என்பதை நான் எண்ணுகிறவன், யோசிப்பவன், சிந்திப்பவன். அதனால்தான், இரண்டையும் ஒரே அரசாகக் கருதுகிறேன். மாநிலம், மத்தி என்பதெல்லாம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டவைகள். அதற்காக இன்றைக்கு இருக்கக்கூடியவை. அதை மறந்துவிடக்கூடாது. மாநிலம், மத்தி என்ற இந்த இரண்டு தத்துவங்களும் நிர்வாகத்திற்காக இருப்பவையே தவிர, பேதங்களுக்காக, பிளவுகளுக்காக அல்ல என்பதை அரசியல் சிந்தனையாளர்கள் நிச்சயமாக மறந்துவிடக்கூடாது.

அதனால்தான் உங்களுக்குச் சொல்கிறேன். படித்த மக்கள் நீங்கள், வேளாண் துறையிலே பணியாற்றுகின்ற நீங்கள், இவற்றை எல்லாம் சிந்திக்க முடியாதவர்கள் அல்ல, சிந்திக்கக் கூடியவர்கள். அப்படிச் சிந்திக்கக்கூடியவர்கள் இருக்கின்ற இந்தக் கூட்டத்தில் உங்களுடைய சிந்தனைக்கு கொஞ்சம் எரு போட்டதைப் போல, தீனி போட்டதைப் போல இந்தக் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன்.

உங்களுக்கே இது பயன்படுமேயானால், உங்களையும் என்னையும் சேர்த்து ஆளுகின்றவர்களுக்கு - மாநிலத்திலே இருந்து ஆளுகின்றவர்களுக்கு, ஏன் மத்தியிலும் இருந்து ஆளுகின்றவர்களுக்கு - அப்படி ஆளுகின்ற கட்சிகளுக்கு மாநிலத்தை, மத்திய அரசை ஆளுகின்ற கட்சிகளிலே உள்ளவர்களுக்கு இது புலப்படாமல் போக முடியாது.

எனவே, எந்த ஒரு திட்டம் ஆனாலும், வேளாண்மைத் துறைக்காகப் போடப்படுகிற திட்டமாக இருந்தாலும், அந்தத் திட்டத்திலும் மத்திய அரசின் பங்கு இருக்கிறது. அதைப் போலவே, மத்திய அரசு திட்டத்தில் மாநில அரசுக்குப் பங்கு இருக்கிறது. ஒரு குழந்தையை நான்தான் பெற்றேன் என்று தாய் உரிமை கொண்டாடினால் கூட, அதிலே தந்தைக்குப் பங்கில்லாமல் இல்லை. தந்தைக்கும் பங்கு இருக்கிறது.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்நின்று நடத்தும் காரியமாக ஏழை, எளியவர்க்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டுவதற்கான கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மாபெரும் திட்டம். அதன்படி, 21 லட்சம் வீடுகள் 6 ஆண்டுக் காலத்திலே கட்டப்பட வேண்டும். இந்த முதல் வருடத்திலே 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட இருக்கின்றன. அநேகமாக முடிக்கப்படப் போகிறது. அவ்வளவு வீடுகள் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன.

ஆனால், அதே நேரத்தில் அழுத்தமாக, உறுதியாகக் கட்டப்படுகின்றன. அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 21 லட்சம் குடிசை வீடுகள் கல் வீடுகளாக, காங்கிரீட் வீடுகளாக ஆக இருக்கின்றன. 6 வருடங்களில், 6 வருடங்களா, அவர்கள் வந்து செய்வார்களா என்றால் வரமாட்டார்கள், கவலைப்படாதீர்கள் நாமே அதை செய்து முடிப்போம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X