கோவில்பட்டி திமுக பிரமுகர் வீட்டில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே திமுக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியை அடுத்த சாலைபுதூர் ஈ.பி.காலனியைச் சேர்ந்தவர் என்.எஸ்.பிள்ளை (62). இவர் நெல்லை மாவட்ட தி.மு.க. மோட்டார் தொழிற்சங்கத் தலைவராக உள்ளார். இவருடைய மனைவி ரஜினி (58). இவர் தனது உறவினர் வீட்டு திருமணத்துக்காக திருவனந்தபுரம் சென்றிருந்தார்.
இந்த நிலையில் தொழிற்சங்க தேர்தலுக்காக என்.எஸ்.பிள்ளை நேற்று முன்தினம் நாகர்கோவில் சென்றார்.
அந்த நேரத்தில் என்.எஸ்.பிள்ளையின் வீட்டுப் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 ஜோடி கம்மல், ஒரு மோதிரம், 14 கிராம் நகைகள் மற்றும் சில ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
உடனே இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.