பாக். தீவிரவாதி கசாப்பைக் காக்க மாதம் ரூ. 2 கோடி செலவு
மும்பை தாக்குதலில் மொத்தம் பத்து பேர் ஈடுபட்டனர். அவர்களில் கசாப்பைத் தவிர மற்ற அனைவரும் கமாண்டோக்களால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.
பிடிபட்ட கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தத் தண்டனையை பாம்பே உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தவுள்ளது.
இந்த நிலையில் தீவிரவாதிகளால் கசாப்பின் உயிருக்கு ஆபத்து நேரிட்டு விடக் கூடாது என்பதற்காக கசாப்பை பலத்த பாதுகாப்புடன் மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ளனர்.
இதற்காக சிறப்பு செல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த செல், குண்டு வீச்சால் கூட தகர்க்க முடியாத அளவுக்கு பலமானது. இந்த அறைக்குள்தான் கடந்த இரண்டு வருடமாக அடைக்கப்பட்டுள்ளான் கசாப்.
புத்தகம் படிப்பது, தூங்குவது, விட்டத்தை நோக்கி வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பது, நீடித்த யோசனையில் நெற்றியைத் தேய்த்துக் கொண்டிருப்பது என்று பொழுதைக் கழித்து வருகிறான் கசாப்.
கசாப் தொடர்பான வழக்குகள் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவே நடக்கின்ற. முக்கியமான தருணங்களில் நீதிபதி சிறைக்கு வந்து விசாரணை நடத்துகிறார்.
கசாப்புக்காக அரசு வக்கீல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கசாப்பின் பாதுகாப்புக்காக மட்டும் மாதத்திற்கு ரூ. 2 கோடி செலவிடப்படுகிறதாம். மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வரும் பாதுகாப்புகளிலேயே இதுதான் மிகவும் விலை உயர்ந்த பாதுகாப்பாம்.
கசாப் அடைக்கப்பட்டுள்ள அறை முட்டை போன்ற வடிவத்திலானது. அந்த அறைக்கும், வீடியோ கான்பரன்சிங் அறைக்கும் இடையிலான நீண்ட காரிடாரும் புதிதாக கட்டப்பட்டது. இந்த காரிடாரும் கூட குண்டு துளைக்க முடியாத அளவுக்கு உறுதியாக கட்டப்பட்டதாகும். லாரி நிறைய குண்டுகளை ஏற்றி வந்து இந்த காரிடார் அல்லது கசாப் உள்ள அறையில் மோதினாலும் கூட அவற்றுக்கு ஒரு பாதிப்பும் வராத வகையில் கட்டப்பட்டுள்ளன.
இதேபோல கே.ஜே. மருத்துவமனையிலும் ஒரு குண்டு துளைக்காத அறை கட்டப்பட்டுள்ளது. கசாப்புக்கு சிகிச்சை தேவைப்பட்டால் அங்கு அனுமதிக்க வசதியாக இது கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை அங்கு கசாப் கொண்டு செல்லப்பட்டதில்லை. அவனுக்கு சிகிச்சை தேவைப்பட்டால் டாக்டர்களும், நர்சுகளும் சிறைச்சாலைக்கே வரவழைக்கப்படுகின்றனர்.
கசாப் அடைக்கப்பட்டிருப்பதையொட்டி கிட்டத்தட்ட ஒரு கோட்டை போல பலத்த பாதுகாப்புடன் திகழ்கிறது ஆர்தர் சாலை சிறைச்சாலை. இங்கு 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.