சுத்தமான ஆட்சியும் 'சுத்தமான' கஜானாவும்!
கடந்த வாரம் முழுக்க நாட்டை உலுக்கிய பல்வேறு ஊழல்கள் குறித்த செய்தியில் மூழ்கிப் போயிருந்தன இந்திய மீடியாக்கள். குறிப்பாக டிவி சேனல்களைத் திருப்பினால் ஊழல் மயமாகவே இருந்தது. கேட்டு கேட்டு காது வலித்ததுதான் மிச்சம் மக்களுக்கு.
இந்த களேபரத்தில் எதியூரப்பா விவகாரம் அடக்கம். தென்னிந்திய மாநிலம் ஒன்றின் முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையுடன் பதவியில் அமர்ந்தவர் எதியூரப்பா. இது ஒன்றை மட்டுமே தகுதியாக வைத்துக் கொண்டு அவர் பாஜக மேலிடத்தை சற்றே ஆட்டிப்படைத்து வருகிறார்.
அதற்கு முன்பு 2008ம் ஆண்டு அவர் குமாரசாமியுடன் சேர்ந்து ஆட்சியமைத்தபோது துணை முதல்வராக இருந்தார். குமாரசாமியுடன் இணைந்து பாஜக அமைத்த அந்த ஆட்சி நீடிக்கவில்லை. இதனால் எதியூரப்பாவுக்காக ஓட்டுப் போட்ட கர்நாடக மக்கள் ஏமாற்றமடைந்தனர், அதிருப்தி அடைந்தனர். ஆனால் இந்த அனுதாப அலையில் நீந்தி அடுத்த முறை ஆட்சியைப் பிடித்து தென்னிந்தியாவின் முதல் பாஜக ஆட்சியை அமைத்தார் எதியூரப்பா.
சுத்தமான அரசைத் தருவேன் என்று அப்போது உறுதியளித்தார் எதியூரப்பா. ஆனால், தற்போது நடந்து வருவதையெல்லாம் பார்க்கும்போது, அரசு 'கஜானா'வைத்தான் அவர்கள் 'சுத்தமாக்கி' வைத்திருப்பது தெரிய வருகிறது. ட்விட்டர் மொழியில் சொல்வதானால் '#FAIL'.
நவம்பர் 24ம் தேதி புதன்கிழமை, தனது முதல்வர் நாற்காலியை கடுமையாகப் போராடி தக்க வைத்துக் கொண்டு விட்டார் எதியூரப்பா. அவருடைய கிரேட் எஸ்கேப் தொப்பியில் மேலும் ஒரு இறகாக இது சேர்ந்துள்ளது. ஆனால் ரெட்டி சகோதரர்கள், முதல்வர் நாற்காலிக்கு அருகில் பெரிய குழியை தோண்டி வைத்து எப்போது இந்த எதியூரப்பா கவிழ்வார் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இப்படி கிரேட் எஸ்கேப் ஒரு தொடர்கதை போல ஆகி வருவதால் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதற்காகவே பெரும்பாலான நேரத்தை செலவிட வேண்டிய நிலையில் இருக்கிறார் எதியூரப்பா. இதனால் கர்நாடகத்தில் ஆட்சி நிர்வாகம் நடைபெறுவது பூஜ்யமாகியுள்ளது.
பாஜகவின் மத்திய தலைமை (காங்கிரஸ் வட்டாரத்தில் கட்சித் தலைமையை மேலிடம் என்று கூறிக் கொள்கிறார்கள்), கர்நாடக பாஜக அரசு திறம்பட செயல்படுவதை கண்காணிக்கவோ அல்லது அது தொடர்பான அறிவுரையைக் கொடுக்கவோ முயலவே இல்லை.
நவம்பர் 24ம் தேதியன்று நிதிஷ் 'மிஸ்டர் க்ளீன்' குமார் நாட்டையே தன் பக்கம் திருப்பினார். பீகார் மாநிலத்தில் மிகப் பெரிய வெற்றியை அவர் தட்டிப் பறித்துள்ளார். அங்கு நடந்த 6 கட்ட வாக்குப் பதிவும் மகா அமைதியாக நடந்தது. வளர்ச்சி குறித்தே நாங்கள் கவலைப்படுகிறோம், ஜாதி அரசியல் எங்களுக்குத் தேவை இல்லை என்று பீகார் மக்ககள் காட்டி விட்டனர்.
இந்தத் தேர்தல் முடிவு, பீகார் குறித்தும் பீகாரிகள் குறித்தும் இதுவரை அடிக்கப்பட்டு வந்த ஜோக்குகளுக்கு ஆப்பு வைத்துள்ளது. இனிமேலும் யாரும் பீகாரைப் பார்த்து சிரிக்கவோ, கேலி செய்யவோ முடியாது. எப்படி வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பீகார் காட்டியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பீகார் மக்கள் நிறைய கற்றுக் கொடுத்துள்ளனர்.
பீகாரில் தண்ணீர்ப் பிரச்சனை இருக்கிறது, மின்சாரப் பிரச்சனை இருக்கிறது. அது வேறு கதை, ஆனால் தளர்ந்து, சிதறிப் போயிருந்த பீகாரை இன்று தூக்கி நிறுத்தி வைத்திருக்கிறார் நிதிஷ். அதில் சந்தேகமே இல்லை.
இப்போது கர்நாடகத்திலும் ஒரு பீகார் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். உண்மையான வளர்ச்சி குறித்து கவலைப்படப் போவதாக, அக்கறை காட்டப் போவதாக எதியூரப்பா நவம்பர் 24ம் தேதி கூறியுள்ளார். அதன் பிறகு எனது அரசியல் எதிரிகளைப் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
முதலி்ல பெங்களூரை முழுமையாக அவர் சுற்றிப் பார்க்க முன்வர வேண்டும். பெங்களூர் சாலைகள் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை அவர் பார்க்க வேண்டும். பெங்களூரை சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று கூறுவது கேவலம். காரணம், சாலைகள் முழுவதும் தான் பள்ளம்தான் உள்ளது.
எனவே, நரேந்திர மோடி, நிதிஷ் குமார் ஆகியோர் தங்களது மாநிலங்களில் எப்படி ஆட்சியை நடத்துகிறார்கள் என்பதை முதலில் எதியூரப்பா கூர்ந்து கவனித்து அதை இங்கே செயல்படுத்த முன்வர வேண்டும். பீகாரால் ஒரு நல்லாட்சியை தர முடியும்போது, ஏன் கர்நாடகாவால் முடியாது?.
நிலைமை இப்படியே இருந்தால், குமாரசாமி ஆட்சி பரவாயில்லையே என்று கர்நாடக மக்கள் கூற ஆரம்பித்து விடுவார்கள். அது படிப்படியாக எதியூரப்பாவின் ஆட்சிக்கும் உலை வைத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.