10 நாட்களுக்குப் பிறகு கால் மணி நேரம் அமளி இல்லாமல் நடந்த லோக்சபா
ஸ்பெக்ட்ரம் விவகாரம், எதியூரப்பா விவகாரம் காரணமாக கடந்த பத்து நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடும் அமளி துமளியால் தொடர்ந்து சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று லோக்சபா கூடியதும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர் எதிர்க்கட்சியினர்.
லோக்சபா கூடியதும், பீகார் மாநில இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதுல் குமாரியை பதவி ஏற்க வருமாறு அழைத்தார் சபாநாயகர் மீரா குமார். இதனால் எதிர்க்கட்சியினர் அமைதியாக இருந்தனர்.
புதுல் குமாரி பதவியேற்று முடித்ததும், மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தையொட்டி இரங்கல் குறிப்பை அவர் வாசித்தார். பின்னர் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் மெளனம் அனுஷ்டித்து இரங்கல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவர் கேள்வி நேரம் தொடங்குவதாக அறிவித்தவுடன், எதிர்க்கட்சியினர் பழையபடி ஜேபிசி விசாரணை தேவை என்ற கோஷத்துடன் அமளியில் குதித்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் மீண்டும் பாதிக்கப்பட்டது.
பாஜக, சிவசேனா, பிஜூ ஜனதாதளம், சமாஜ்வாடி, அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி கோஷமிட ஆரம்பித்ததால் மீண்டும் அவை நடவடிக்கைகள் முடங்கிப் போயின.