For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ராஜாவை விசாரிக்காதது ஏன்?-சுப்ரீம் கோர்ட் கேள்வி

Google Oneindia Tamil News

Raja
டெல்லி: ஸ்பக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம்தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராஜாவை ஏன் விசாரிக்கவில்லை என்று சிபிஐயிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் நேற்று சிபிஐ வக்கீல் கே.கே.வேணுகோபாலிடம் சரமாரியான கேள்விகளைக் கேட்டனர்.

அவர்கள் கூறுகையில்,

2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக, ஊழல் கண்காணிப்பு ஆணையர் அளித்த கடிதத்தின் அடிப்படையில், சி.பி.ஐ., கடந்தாண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், அடையாளம் தெரியாதவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் பெற்றதாக ஊழல் கண்காணிப்பு ஆணையம் குறிப்பிட்டிருந்த இரண்டு நிறுவனங்களின் பெயர்களை சேர்க்காதது ஏன்?.

இந்த நிறுவனங்கள் 1,500 கோடி மற்றும் 1,600 கோடி ரூபாய்க்கு லைசென்ஸ் வாங்கிவிட்டு, சில நாட்களில் தங்களது பங்குகளை 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்துள்ளன. இவர்களை விசாரணைக்கு உட்படுத்தாதது ஏன்?

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலரிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தாதது ஏன்?

இவர்கள் இருவர் பற்றி, மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையிலும், ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் அறிக்கையிலும் குற்றம் சுமத்தப்பட்டும், அவர்களிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்த தவறிவிட்டது.

ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் என்பது அரசியல் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உயரிய அமைப்பு. எட்டாயிரம் ஆவணங்களை ஆய்வு செய்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவரிடமோ அல்லது தொலைத்தொடர்புத் துறை செயலரிடமோ விசாரணை நடத்தவில்லை. இது பற்றி கேட்டால், சுற்றி வளைத்துப் பேசுகிறீர்கள் என்றனர்.

பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில்,

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, 2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி என்று முதலில் நிர்ணயித்து இருந்தனர். கடைசியில் அதை, செப்டம்பர் 25ம் தேதி என திடீரென்று மாற்றி முன் தேதியிட்டனர். இதனால், விண்ணப்பித்த 575 விண்ணப்பங்களில் 343 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

ரிலையன்ஸ் அனில் அம்பானிக்கு சொந்தமான டைகர் டிரஸ்டி என்ற கம்பெனி, 50 லட்சம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு 2007ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி மாற்றியுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்திற்கு வங்கிக் கணக்கில் ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் இருந்துள்ளது. இந்த பங்குகள் யாருக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க, சி.பி.ஐ., எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றார்.

பின்னர் தொடர்ந்து நீதிபதிகள் பேசுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான வழிமுறையை முடிவு செய்ய, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவை அமைக்கலாம் என்ற சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை, தகவல் தொடர்புத்துறை நிராகரித்துள்ளது. இப்படி செய்தால் வழக்குகள் போடுவர் என கூறியிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றனர்.

பின்னர் நீதிபதி கங்குலி பேசுகையில்,

கோர்ட்டுக்கு போவார்கள் என்பதற்காக, மக்களுக்கு செய்ய வேண்டிய நல்ல விஷயத்தைச் செய்யாமல் இருப்பீர்களா? வழக்கு போடுவது ஒன்றும் குற்றச் செயல் அல்லவே என்றார்.

தகவல் தொடர்புத்துறை அமைச்சரகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் வழங்கிய உரிமங்களை ரத்து செய்வது தொடர்பாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைக்காக காத்திருக்கிறோம் என்றார்.

கே.கே.வேணுகோபால் பதிலளிக்கையில், வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. தனக்கென்று தனி விசாரணை பாணியை வைத்திருக்கிறது. இதுவே விசாரணை தாமதத்திற்குக் காரணம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X