தனிக்கட்சி துவங்குகிறார் ஜெகன்மோகன் ரெட்டி?
ஆந்திராவில் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜ சேகரரெட்டி கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மகனும், கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன் மோகன் ரெட்டிக்கே முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஜெகனும் இதனை மேலிடத்துக்கு தெரியப்படுத்தினார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் அதை ஏற்கவில்லை.
ஜெகன் இன்னும் அனுபவம் பெற வேண்டும். அதுவரை மாநில அளவில் கட்சியை பலப்படுத்தும் வேலைகளைப் பார்க்க வேண்டும் என தெரிவித்தது காங்கிரஸ் மேலிடம்.
எனவே ராஜசேகர ரெட்டிக்கு அடுத்த நிலையில் இருந்த ரோசய்யா புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ஜெகன் மோகனும் அவரது ஆதர வாளர்களும் ரோசய்யாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ரோசய்யா சென்ற இடங்களில் எல்லாம் எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள்.
இன்னொரு பக்கம், தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காக ஆந்திராவில் ஆறுதல் யாத்திரையை ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கினார். தன் தந்தை ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்தபோது உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் குடும்பத்தினரை அவர் சந்தித்து நிதி உதவி செய்தார். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த முடியாததால் ரோசய்யா மீது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி நடத்தும் நாளிதழ்கள், தொலைக் காட்சிகளிலும் சோனியா, ராகுல் பற்றி தரக்குறைவான தகவல்கள் வெளியிடப்பட்டன. இதனால் ரோசய்யா மீதான அதிருப்தி அதிகரித்தது. சோனியா உத்தரவின் பேரில் கடந்த புதன்கிழமை ரோசய்யா பதவி விலகினார்.
புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி தேர்வானார். இவர் ராஜசேகர ரெட்டியின் தீவிர ஆதரவாளர். இவரை முதல்வராக நியமிப்பதன் மூலம் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டி விடலாம் என்று காங்கிரஸ் மேலிடம் நினைத்தது.
ஒரே இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிரண்குமார் ரெட்டியை ஜெகன்மோகன் ரெட்டி எதிர்க்க மாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால் கிரண்குமாரை ஜெகன்மோகன் நேரில் சந்திக்கவும் இல்லை. வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.
கிரண்குமார் ரெட்டி மீது கோபம்...
கிரண்குமார் ரெட்டி முதல்வர் பதவி ஏற்றதும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியும், சில நடவடிக்கைகளும் ஜெகன்மோகன் ரெட்டியை கடும் கோபம் அடையச் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கிரண்குமார் தன் பேட்டியில், "ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி அமல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் அகில இந்திய காங்கிரஸ் வகுத்து கொடுத்த திட்டங்களாகும். அந்த திட்டங்கள் தொடரும்" என்றார். மேலும் ஆந்திராவில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தேவை இல்லாமல் போராடுபவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவார்கள் என்றார்.
இதை ஜெகன்மோகன் ரெட்டியால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தன் தந்தை அமல்படுத்திய திட்டங்களை காங்கிரஸ் வகுத்து கொடுத்த திட்டம் என்று கிரண்குமார் சொல்கிறாரே என்று ஆதங்கப்பட்டார்.
ஆந்திராவில் செயல்படுத்தப் படும் நலத்திட்டங்கள் காங்கிரசின் திட்டங்கள் என்றால் அவை ஏன் காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்படவில்லை என்று ஜெகன்மோகன் கேள்வி எழுப்பினார்.
ஹைதராபாத் திரும்பிய ஜெகன்...
இந்த நிலையில் புதிய மந்திரி சபையில் யார்- யாரை சேர்ப்பது என்று கிரண் குமார் ரெட்டி ஆலோசனை நடத்தி வருகிறார். ஜெகன் மோகனின் சித்தப்பா ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியை மந்திரிசபையில் சேர்க்க கிரண்குமார் தூது விட்டதாக தெரிகிறது. இதன் மூலம் தன் குடும்பத்தில் கிரண்குமார் ரெட்டி பிளவை ஏற்படுத்த முயல்கிறார் என்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இனியும் பொறுமையாக இருக்க முடியாது என்று ஆவேசப்பட்ட ஜெகன் மோகன் நேற்று பெங்களூரில் இருந்து ஹைதராபாத் திரும்பினார். பஞ்சராஹில்ஸ்சில் உள்ள தனது வீட்டில் ஆதரவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ரகசிய கூட்டத்தில் 18 முன்னாள் மந்திரிகள், 20 எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்து கொண்டனர். ஆந்திர அரசியலில் அடுத்தக் கட்டமாக எத்தகைய நட வடிக்கைகளில் ஈடுபடுவது என்பது பற்றி ஆதரவாளர்களிடம் ஜெகன்மோகன் கருத்து கேட்டறிந்தார். ஆனால் அவர் உறுதியான எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
கிரண்குமார் ரெட்டி புதிய மந்திரி சபை அமைக்கட்டும். அதில் இடம் பெறுபவர்களைப் பார்த்து விட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாகத் தெரிய வந்துள்ளது. தனது ஆதரவார்கள் யார்- யாரெல்லாம் கிரண்குமார் ரெட்டி பக்கம் சாய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த நிதானம் காட்டுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி என்று கூறுகிறார்கள்.
இதற்கிடையே ஜெகன் மோகனின் தீவிர ஆதரவாளர் ரவீந்திரநாத் உள்பட சிலர் கிரண்குமார் ரெட்டி ஆதரவாளராக மாறியுள்ளதாகத் தெரிகிறது. ஜெகன் மோகனுக்கு செல்வாக்கு இருக்கும் ராயலசீமா பகுதியில் உள்ள மேலும் பலரை இழுக்க கிரண்குமார் தூது விட்டப்படி உள்ளாராம்.
ஜெகன்மோகன் திட்டம்:
காங்கிரஸ் மேலிடத்தின் இந்த புதிய அணுகு முறைக்கு பதிலடி கொடுக்க ஜெகன்மோகனும் தயாராகி வருகிறார். முதல் கட்டமாக ஆறுதல் யாத்திரையை தொடர்ந்து நடத்த தீர்மானித்துள்ளார்.
இதன் மூலம் ரோசய்யாவுக்கு வெறுப்பேற்றியது போல கிரண்குமாரையும் தவிக்க வைக்க முடியும் என்று நினைக்கிறார்.
புதிய கட்சி எப்போது?
அதன் பிறகு புதிய கட்சி தொடங்கும் முடிவுக்கு ஜெகன்மோகன் வந்துள்ளார். இதற்கான வேலை களை அவர் ஓசையின்றி தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காங் கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், இன்னும் 2 மாதத்தில் ஜெகன்மோகன் புதிய கட்சி தொடங்கி விடுவார் என்றார்.