இன்று மாவீரர் நாள்... உலகம் முழுக்க ஈழத் தமிழர்கள் அனுஷ்டிப்பு!
பிரபாகரன் தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல், மாவீரர் தினத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் அமெரிக்கா முதல் நார்வே வரையில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் பலத்த பாதுகாப்பு...
அதே நேரம், இலங்கையில் மாவீரர் தினம் கொண்டாடப்பட முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புலிகளின் கொடிகளோ, மாவீரர் நாளுக்கான அறிகுறிகளோ எங்கும் காணப்படவில்லை. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் நினைவிடங்கள் அனைத்தும் இப்போது இலங்கை ராணுவத்தின் வெற்றி நினைவுச் சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன.
யாழ் பத்திரிகைகளுக்கு மிரட்டல்...
இன்னொரு பக்கம், பிரபாகரன் பிறந்த நாள், மாவீரர் நாள் மற்றும் புலிகள் தொடர்பான செய்திகளை தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடக் கூடாது என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வெளியாகும் எந்தத் தமிழ்ப் பத்திரிகையும் புலிகளின் இத்தகைய மாவீரர் தின செய்திகளை வெளியிட்டு குழப்பம் விளைவிக்கக் கூடாது என்று பெயரில்லா கடிதம் ஒன்று வந்துள்ளதாக, யாழ்ப்பாண தமிழ்ப் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே புலிகள் தொடர்பாக வெளியாகும் செய்திகளை தணிக்கை செய்துதான் விற்பனைக்கு அனுமதிக்கிறது அதிபர் ராஜபக்சே அரசு என்பது குறிப்பிடத்தக்கது.