ராஜாவுக்கு எதிராக பேரணி செல்ல முயற்சி-ராமராஜன் உள்பட 85 பேர் கைது
காஞ்சிபுரம்: வாலாஜாபாத்தில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற நடிகர் ராமராஜன் உள்பட அ.தி.மு.க.வினர் 85 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் மற்றும் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் சைக்கிள் பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் நேற்று காலை வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் குவிந்தனர். அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி பேரணி செல்ல முயற்சிப்பதை அடுத்து காஞ்சீபுரம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசாரும், சிறப்பு அதிரடி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் தி.மு.க.வினரும் பஸ் நிலையம் அருகில் ஏராளமாய் குவிந்துவிட்டனர். அ.தி.மு.க.வினரை கைது செய்ய கோரி போலீசாரை வலியுறுத்தினார்கள். சிறிது நேரம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
உடனே தி.மு.க.வினரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். ஆனாலும் அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் வாலாஜாபாத் பி.கணேசன் தலைமையில், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி.யும் நடிகருமான ராமராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பேரணி செல்ல முயன்றனர்.
இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து பேரணி செல்ல முயன்ற ஒன்றிய செயலாளர் வாலாஜாபாத் ப.கணேசன், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், நடிகர் ராமராஜன் உள்பட 85-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதான அனைவரும் வல்லக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலை 5 மணி அளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.