தஞ்சை பெரிய கோவில் ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது-கலசம் உடைந்தது
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த ஒரு கலசம் உடைந்து சிதறி விட்டது.
பெரிய கோவில், பெருவுடையார் கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் முகப்பு கோபுரமான கேரளாந்தகன் வாயிலைத் தாண்டி உள்ளே போனால், ராஜராஜன் வாயில் எனப்படும் கோபுரம் உள்ளது.
இந்த கோபுரத்தில் சுண்ணாம்பு, செங்கற்களால் ஆன 5 கலசங்கள் உள்ளன. ஒவ்வொரு கலசங்களும் சுமார் 4 அடி உயரம் கொண்டவை.
தஞ்சையில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்றும் அந்த மழை நீடித்தது. மழை பெய்து கொண்டிருந்தாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கம்போல் காணப்பட்டது.
மாலை 4.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் பெரிய கோவிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் மழையில் நனையாமல் இருப்பதற்காக ராஜராஜன் கோபுரத்திற்கு கீழ் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மின்னல் தாக்கியது. அந்த மின்னல் ராஜராஜன் கோபுரத்திற்கு மேல் வைக்கப்பட்டிருந்த கலசங்களில் 4-வது கலசத்தின் மீது விழுந்து, இதில் கலசம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்தனர். இதனால் அங்கிருந்து ஓடினர்.
மின்னல் தாக்கிய அதிர்வின் காரணமாக கோவில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருந்த அவசரகால அலாரம் ஒலித்தது. இதனால் பெரிய கோவில் பெரும் பரபரப்பானது.
தகவல் அறி்நததும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாநில அமைச்சர் உபயதுல்லா, மாவட்ட கலெக்டர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
மின்னல் தாக்கியதால் கோபுரத்திற்கு விரிசல் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
9 மாவட்டங்களுக்கு விடுமுறை:
தற்போது காவிரி டெல்டாப் பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அடுத்த 72 மணி நேரத்தில மழை வலுக்கும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களான தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, கரூர் மற்றும் தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதில், தேனி, திண்டுக்கல், நாகை, திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும். மற்ற மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத் தேர்வுகள் வேறு தேதியில் நடத்தப்படும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.