எதிர்ப்பார்ப்பை மீறிய வளர்ச்சி: ஜிடிபி 8.9 சதவீதமாக உயர்வு!
டெல்லி: இந்தியாவின் மொத்த உற்பத்தி - ஜிடிபி- 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட அதிகமாகும்.
இரண்டாம் காலாண்டில் 8.7 முதல் 8.75 சததவீதம் வரை ஜிடிபி இருக்கும் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்பு கூறியிருந்தார்.
ஆனால் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவிலும், இந்தியாவின் மொத்த உற்பத்தி அதிகரித்தபடி உள்ளது. முதல் காலாண்டில் 8.8 சதவீத வளர்ச்சி கண்டிருந்த இந்திய ஜிடிபி, இரண்டாம் காலாண்டில் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகவலை மத்திய புள்ளிவிவரத் துறை இன்று அறிவித்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவது எளிதாகவே இருக்கும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 8.5 சதவீதம் உயரும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
ஆனால் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பார்ப்புக்கும் அதிகமாகவே வளர்ச்சி அதிகரித்துள்ளது.