லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்!- பேச்சில் உடன்பாடு!!
சுங்க வரியை கிலோ மீட்டருக்கு ரூ 1 குறைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை தனியார் வசம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. அத்தகைய நெடுஞ்சாலைகளில் தனியார்கள் ஆங்காங்கே டோல்கேட் அமைத்து சுங்கவரி வசூலித்து வருகிறார்கள்.
தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மற்ற நெடுஞ்சாலைகளில் சுங்க வரியைக் குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
2008-ல் மத்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி காலியாக செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மொத்த சுங்க வரியில் 25 சதவீதம்தான் வசூலிக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு 50 சதவீத சுங்க வரிதான் கட்டணமாகப் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 5-ந் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர்.
இதையொட்டி கடந்த 1-ந்தேதி முதல் லாரி சரக்கு புக்கிங் அனைத்தும் நிறுத்தப்பட்டன. வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மாநிலங்களுக்கிடையே ஓடும் லாரிகள் நிறுத்தப் பட்டதால் காய்கறி உள்பட அத்தியாவசியப் பொருட்கள் முக்கிய நகரங்களில் தேங்கியுள்ளன. பார்சல்களும் முடங்கி விட்டன.
இதையடுத்து லாரி உரிமையாளர்களை மத்திய அரசு அழைத்து பேச்சு நடத்தியது. மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சர் கமல்நாத்துடன் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி மற்றும் சங்க நிர்வாகிகள் பேச்சு நடத்தினார்கள்.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.