பெங்களூரில் பிரான்ஸ் தூதரகம்.. அதிபர் சார்கோசி இன்று திறந்து வைத்தார்!!
அவரது இந்தப் பயணத்தின் போது, இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்கு பின் சர்கோசியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இன்று பெங்களூருக்கு வந்த அவர், புதிய பிரெஞ்ச் தூதரகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் இஸ்ரோ சென்றார். அங்கு இந்தோ - பிரெஞ்ச் கூட்டு சேட்டிலைட் திட்டத்தைத் துவங்கி வைத்தார். பருவநிலை மாறுதல், கடல் ஆராய்ச்சி போன்றவற்றுக்காக இந்த செயற்கைக் கோள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நிக்கோலஸ் சர்கோசி இன்று மாலையில் ஆக்ரா சென்று மனைவி புரூனாவுடன் தாஜ்மகாலின் அழகை ரசிக்கிறார். அவருடன் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹெர்வி மோரின் மற்றும் பல உயர் அதிகாரிகள் இந்தியா வருகின்றனர்.
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, வரும் ஜி 20 மாநாடு குறித்துப் பேசுகிறார்.
சர்வதேச நிதி அமைப்புகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் விலையை நிலைப்படுத்துதல் குறித்தும் அவர் பிரதமருடன் விவாதிக்கிறார்.
10000 மெகா வாட் இந்திய - பிரான்ஸ் அணு உலைத் திட்டத்தில் உடன்பாட்டில் திங்களன்று கையெழுத்திடுகிறார் சர்கோசி.
சர்கோசியின் வருகையையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.