'கோத்ரா வன்முறையில் மோடிக்கு தொடர்பில்லை'-எஸ்ஐடி அறிக்கை குறித்து அத்வானி மகிழ்ச்சி
இதுகுறித்து அவர் தனது பிளாக்கில் எழுதுகையில், மோடிக்கு அவப் பெயரை ஏற்படுத்த, ஆதாரமே இல்லாத அடிப்படை இல்லாத புகார்களை எதிரிகள் சுமத்தினர்.
ஆனால் மோடிக்கு எதிராக அவதூறுப் புகார்களை ஒரு தரப்பு அள்ளி வீசிக் கொண்டிருந்தபோது மோடிக்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் பாராட்டுகள் குவி்ந்தன. இதற்குக் காரணம், குஜராத் மாநிலத்தை அவரது ஆட்சியின் கீழ் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றியமைத்ததற்காக.
நாட்டுக்கே இன்று முன்னுதாரணமாக விளங்குகிறது குஜராத். காரணம், மோடியின் நேர்மையான, அக்கறையான ஆட்சியே.
ஆனால் அவரை எதிர்க்க வேண்டும், அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படிப்பட்ட அவதூறுகளை சுமத்தி வந்தனர். ஆனால் இன்று அவை பொய்யானவை என்று எஸ்ஐடி தனது அறிக்கையில் கூறியுள்ளதாக வந்துள்ள செய்தி மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார் அத்வானி.
குஜராத் மாநிலம் குல்பர்கா சொசைட்டியில் நடந்த மிகப் பெரிய வன்முறைப் படுகொலை வெறியாட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி உள்பட 62 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் மோடிக்கு நேரடி தொடர்புண்டு என்று ஜாப்ரியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் புகார் கூறியிருந்தார். இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடியை அமைத்தது உச்சநீதிமன்றம். இந்த எஸ்ஐடி சமீபத்தில் மோடியை நேரில் வரவழைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தியது நினைவிருக்கலாம்.
தற்போது எஸ்ஐடி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மோடிக்கு இந்த சம்பவத்திலும், குஜராத்தில் நடந்த பிற கலவரங்களிலும் நேரடி தொடர்பு இல்லை என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.