ஊழலை மறைக்கவே திமுக-காங். கூட்டணிக்கு நேரம் போதவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தர்மபுரி: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு தடுமாறுவதாக மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தர்மபுரியில், தகவல் தொழில் நுட்ப அறிவு மையம் மற்றும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இதுவரை நடைபெறாத மெகா ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகும். இந்தப் பிரச்சனையில் ஆளும் கூட்டணி அரசு நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த மறுப்பதால் தான் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் கூட விவாதிக்கப்படவில்லை. நிதி மற்றும் ரயில்வே மசோதாவை ஒரு தலைப்பட்சமாக அரசு நிறைவேற்றியுள்ளது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை தடுத்து இருந்தால் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியும்.
இந்த தொகையில் நாட்டில் உள்ள பெரும் பகுதி மக்களுக்கு புதிய மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் கட்டியிருக்க முடியும். உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்திருக்க முடியும்.
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் சில குடும்பங்கள், கட்சிகள் பலனடைந்துள்ளன என்று நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு, கர்நாடக பாஜக அரசின் ஊழல்கள் ஆகியவற்றை மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆக்கப்பூர்வமான எந்தப்பணியையும் மேற்கொள்ளவில்லை. ஊழல் புகார்களை மூடி மறைக்கவே இவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது என்றார்.