ஸ்பெக்ட்ரம்: விசாரணையை தொடங்கிய ஜோஷி-பாஜக எரிச்சல்!
இந்த விவகாரத்தில் மிகுந்த அதிகாரம் மிக்க நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவே விசாரணை நடத்தலாம், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்று காங்கிரசும் திமுகவும் கூறி வருகின்றன.
மேலும் இந்தக் குழுவுக்கு பாஜக மூத்த தலைவரான ஜோஷி தான் தலைவராக உள்ளார் என்பதால், இந்த விசாரணையில் பாரபட்சம் ஏதும் இருக்காது என்று திமுகவே கூறி வருகிறது.
ஆனால், அதெல்லாம் ஆகாது... நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தான் வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது.
இந் நிலையில் பாஜகவுக்கே அதிர்ச்சி தரும் வகையில், ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குக் குழு தனது விசாரணையை ஆரம்பித்துவிட்டது. இதன்மூலம் இந்த விவகாரத்தில் பாஜகவுக்குள்ளேயே விரிசல் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய தணிக்கைத்துறையின் அறிக்கை மீதான ஆய்வை ஆரம்பித்துவிட்ட ஜோஷி, மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு 8 பக்க கேள்வி பட்டியல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2001ம் ஆண்டு பின்பற்றப்பட்ட விலைக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தி, 2007ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் எழுதிய கடிதத்தை பொருட்படுத்தாதது ஏன்? என்று தொலைத் தொடர்புத்துறைக்கு (ராசாவுக்கு) கேள்வி எழுப்பபட்டுள்ளது.
மேலும் இந்தப் பிரச்சனையில் சட்ட அமைச்சகம் மற்றும் நிதித்துறை அமைச்சகம் தெரிவித்த கருத்துகளையும் கண்டு கொள்ளாதது ஏன் என்பதற்கு விளக்கம் அளிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, 157 லைசென்சுகளை ஏல அடிப்படையில் ஒதுக்கீடு செய்யாததில் ஏற்பட்ட உத்தேச வருவாய் இழப்பு விவரத்தை கணக்கிடும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை ஒரு வாரம் குறைத்தது, தவறான தகவல் கொடுத்து லைசென்சு பெற்ற நிறுவனங்கள் மீது மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கை ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்குமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது குழுவின் முன் ஆஜராகுமாறு முன்னாள் தொலைத் தொடர்புத்துறை கட்டுப்பாட்டு ஆணைய (டிராய்) தலைவர் பிரதீப் பைஜல், தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெருவா ஆகியோருக்கு ஜோஷி உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட உண்மையான இழப்பு எவ்வளவு என்பது குறித்து விளக்கமளிக்க தொலைத் தொடர்புத்துறைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரூ. 1.7 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதாக கணக்குத் தணிக்கை அதிகாரி குத்துமதிப்பாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜோஷி எழுப்பியுள்ள கேள்வி, இந்த விவகாரத்தில் உண்மையான இழப்பை தெரிவிக்க மத்திய அரசுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
மேலும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு தான் விசாரிக்க வேண்டும் என்று இன்று 18வது நாளாக நாடாளுமன்றத்தை பாஜக முடக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அது எதுக்கு என்பது போல தனது குழுவின் விசாரணையை ஜோஷி தொடங்கிவிட்டார்.
இவ்வாறு காங்கிரஸ் கூட்டணி்க்கு உதவும் வகையில் தங்கள் கட்சியின் தலைவரான ஜோஷி தனது விசாரணையை ஆரம்பித்துவிட்டது பாஜகவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
எங்கள் ஆட்சியில் நடந்த ஒதுக்கீடு விசாரணைக்கும் தயார்:
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நடந்த ஒதுக்கீடு பற்றிய விசாரணைக்கும் தயார் பாஜக அறிவித்துள்ளது.
முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்ற 1998ம் ஆண்டில் இருந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றிய விசாரணைக்கு பாஜக தயாரா என்று காங்கிரஸ் எழுப்பியது.
இந் நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.அலுவாலியா நிருபர்களிடம் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு பற்றி விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது 1998ம் ஆண்டு தேசிய தொலைத் தொடர்பு கொள்கை வகுக்கப்பட்டது. நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைத்தால் 1998ம் ஆண்டு முதல் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றியும் விசாரிக்க வேண்டும் காங்கிரஸ் கூறுகிறது. அதற்கும் பாஜக தயார் என்றார்.