டோணி, சச்சின் உள்பட 7 வீரர்கள் தெ. ஆப்பிரிக்கா கிளம்பினர்
மும்பை: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினரின் 2வது பிரிவு இன்று அங்கு புறப்பட்டுச் சென்றது.
டிசம்பர் 16ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் தொடங்குகிறது. இந்த தொடரை அபாரமாக வெல்வதற்காக இந்திய வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் முடிவு செய்தார். அதன்படி இந்திய வீரர்களை முன்கூட்டியே தென் ஆப்பிரிக்காவுக்குக் கூட்டிச்சென்று சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை அவர் முன்வைத்தார்.
அதன்படி இந்திய வீரர்கள் தற்போது படிப்படியாக தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். நேற்று சட்டேஸ்வர் பூஜாரா, ஜெயதேவ் உனத்கத், உமேஷ் யாதவ், பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இவர்களுடன் ஷேவாக்கும் செல்வதாக இருந்தது. ஆனால் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் போகவில்லை.
இந்த நிலையில், இன்று 2வது குழு புறப்பட்டுச் சென்றது. மும்பையிலிருந்து இன்று அதிகாலை இந்த குழு கிளம்பிச் சென்றது. கேப்டன் டோணி, சச்சின் டெண்டுல்கர், ஷேவாக், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, ஸ்ரீசாந்த், விருத்திமான் சாஹா, இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, அணி மேலாளர் ரஞ்சிப் பிஸ்வால் ஆகியோர் துபாய் வழியாக கேப்டவுனுக்குக் கிளம்பிச் சென்றனர்.
மீதமுள்ள கெளதம் கம்பீர், ஜாகிர் கான், முரளி விஜய் ஆகியோர் (இவர்கள் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருவதால்) டிசம்பர் 12ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்தியா, தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 16ம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.