வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து அதிக வருவாய் பெறும் இந்தியா!
மேலும் உலக அளவில் தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாக (முதலிடம் மெக்ஸிகோவுக்கு!) உலக வங்கியின் 'பேக்ட்புக் 2011' தெரிவிக்கிறது.
இத்தனைக்கும் வெளிநாடுகளில் 11.4 மில்லியனாக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை, 5.4 மில்லியனாகக் குறைந்துள்ளது. இருந்தாலும் ஆசிய நாடுகளிலேயே 2வது இடத்தில் உள்ளது, வெளிநாடுகளில் பணிபுரிவோர் எண்ணிக்கையில். முதலிடத்தில் சவுதி அரேபியா உள்ளது.
வெளிநாடுகளில் வசிப்போர் அனுப்பும் தொகை சர்வதேச அளவில் 440 பில்லியனாக உள்ளது. இந்தத் தொகையில் 301 பில்லியன் டாலரை மத்திய வருவாய் நாடுகள் எனக் கருதப்படும் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி பெறுகின்றன.
இந்திய நகரங்களில் பெங்களூர்தான் அதிக அளவு வெளிநாட்டு வருவாயைப் பெறுகிறது. இந்த ஆண்டு 11 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது பெங்களூரு.
2011-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள இடம் பெயர்ந்தோர் பற்றிய கணக்கு அறிக்கையின்படி, கத்தாரில்தான் அதிக வெளிநாட்டவர் வசிக்கின்றனர். இந்த நாட்டின் மக்கள் தொகையில் 87 சதவீத மக்கள் வெளிநாட்டவர்களே. மொனாக்கோவில் 72 சதவீத வெளிநாட்டவர்களும், ஐக்கிய அரபு எமிரேட்டில் 70 சதவீதத்தினரும், குவைத்தில் 69 சதவீத வெளிநாட்டவர்களும் உள்ளனர்.
பெரும்பாலான வெளிநாட்டவர் வசிப்பது அதிக வருமானம் கொழிக்கும் வளர்ந்த நாடுகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியர்களைப் பொறுத்தவரை அவர்களின் முக்கிய இலக்கு அமெரிக்காதான் என்கிறது உலக வங்கி அறிக்கை. 7.9 மில்லியன் ஆசியர்கள் அமெரிக்காவில் உள்ளனர். மெக்ஸிகோவுக்கு அடுத்து ஆசியர்களே அமெரிக்காவில் அதிகம் உள்ளனர்.
இதைவிட சுவாரஸ்யமான ஒரு தகவல் உண்டு. ஆசியர்கள் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் போக விரும்பும் நாடு இந்தியாதான். 6.1 மில்லியன் ஆசியர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷ், நேபாளம், இலங்கை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்!