தூத்துக்குடி அருகே மகனை உயிருடன் புதைத்த தாய் கைது
ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி அருகே உடல் ஊனமுற்ற மகனை உயிருடன் புதைத்த ஈழத் தமிழ் அகதிப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமில் வசிப்பவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன். இவருக்கு யோகீஸ்வரி என்ற மனைவியும், மணிகண்டன், விக்னேஸ்வரன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
மணிகண்டன் போலியோ நோயால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாமல் அவதிபட்டு வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த யோகீஸ்வரியின் தம்பி மகேஸ்வரன், மணிகண்டனை வீட்டில் காணாது குறித்து அவரிடம் கேட்டார். அப்போது யோகீஸ்வரி முன்னுக்கு பின் பேசினார்.
பின்னர் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் உயிருடன் புதைத்ததாகத் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மாசார்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து யோகீ்ஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கூறுகையில்,
நான் ஏற்கனவே வறுமையால் வாடி வருகிறேன். இதனால் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மணிகண்டனை என்னால் கவனிக்க முடியவில்லை. அவனை கவனிக்க வேண்டி இருந்ததால் நான் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தி்ல் கடந்த 8-ம் தேதி அதிகாலை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் குழி தோண்டி அவனை உயிருடன் புதைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து எட்டயபுரம் தாசில்தார் அய்யாதுரை பாண்டியன், விளாத்திகுளம் டிஎஸ்பி ராஜாமன்னார் முன்னிலையில் எட்டயபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் துளசிலெட்சுமி குழுவினர் புதைக்கப்பட்ட சிறுவன் மணிகண்டன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து யோகீஸ்வரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.