அரிசி - பருப்பு விலை குறைந்தது; முந்திரி-வெல்லம் விலை உயர்ந்தது!
பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்க வெல்லம், ஏலக்காய், முந்திரி பருப்பு போன்றவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளதால், இவற்றின் விலை உயர்ந்துவிட்டதாக சந்தையில் கூறப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் விற்பனையாகும் வேலூர் வெல்லம் கிலோவுக்கு ரூ 55 வரை விற்கப்படுகிறது. இதற்கு முன்பு வரை கிலோ ரூ 32 வரை விற்கப்பட்டது.
சேலம் வெல்லம் கிலோவுக்கு ரூ 45 ஆக விற்கப்படுகிறது.
ரூ.400-க்கு விற்பனையான ஒரு கிலோ முந்திரி பருப்பு (முதல் ரகம்) ரூ.500 ஆகவும், ரூ.300-க்கு விற்பனையான 2-ம் ரக முந்திரி பருப்பு ரூ.400 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதேபோல், ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏலக்காய் ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ.1200 ஆக அதிகரித்துள்ளது.
விளைச்சல் குறைவால், புளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.90-க்கு விற்பனையான ஒரு கிலோ புளி (முதல் ரகம்), தற்போது ரூ.110 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், ரூ.70-க்கு விற்பனையான 2-ம் ரக புளி, ரூ.90 ஆக உயர்ந்துள்ளது.
மலைப் பூண்டு கிலோ ரூ 280!
குஜராத் மற்றும் சீனாவில் விளையும் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ரூ.180-க்கு விற்பனையான ஒரு கிலோ பூண்டு, ரூ.240 ஆகவும், ரூ.230-க்கு விற்பனையான மலை பூண்டு, ரூ.280 ஆகவும் விலை குறைந்துள்ளது. சீனாவில் இருந்து அடுத்த 2 மாதங்களில் பூண்டு அதிகமாக இறக்குமதி செய்யப்படும். அதனைத் தொடர்ந்து விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அரிசி விலை குறைந்தது!
அதே நேரம் டெல்டா மாவட்டங்களில் அறுவடை முடிந்து நெல் வரத்து உயர்ந்துள்ளதால் அரிசி விலை குறைந்துள்ளது. இது பருப்பு அறுவடை சீஸன் என்பதால் அதன் விலையும் குறைந்துள்ளது.
மேலும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்டதாலும், தமிழகத்திற்கு அரிசி வரத்து அதிகரித்துள்ளது.
ரூ.20-க்கு விற்பனையான ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.18 ஆகவும், அதிசய பொன்னி ரூ.22-ல் இருந்து ரூ.20 ஆகவும், பாபட்லா பொன்னி ரூ.24-ல் இருந்து ரூ.22 ஆகவும் விலை குறைந்துள்ளது. இதேபோல், இட்லி அரிசி ஒரு கிலோ ரூ.25-ல் இருந்து ரூ.23 ஆக விலை குறைந்துள்ளது.
பச்சரிசி ஒரு கிலோ ரூ.22-க்கு விற்பனையானது, தற்போது ரூ.20 ஆக விலை குறைந்துள்ளது. பொன்னி பச்சரிசி ரூ.32-ல் இருந்து ரூ.30 ஆக விலை குறைந்துள்ளது. மேலும், விலை குறைய வாய்ப்பு உள்ளது.
சர்க்கரை விலை உயர்வு
இந்தியாவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கடந்த மாதம் 17 லட்சம் டன் சர்க்கரையை அரசு ஒதுக்கியது. ஆனால், இந்த மாதம் 15 லட்சம் டன்னாக அதை குறைத்துக் கொண்டது. இதனால், சர்க்கரை விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ரூ.28-க்கு விற்பனையான ஒரு கிலோ சர்க்கரை தற்போது ரூ.33 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், பருப்பு வகைகள் விலை குறைந்துள்ளது. ரூ.68-க்கு விற்பனையான ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.58 ஆகவும், தான்சானியா நாட்டு துவரம் பருப்பு ரூ.60-ல் இருந்து ரூ.50 ஆகவும் விலை சரிந்துள்ளது. இதேபோல், அமெரிக்கா, கனடா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டர்கி ரக துவரம் பருப்பு ரூ.44-ல் இருந்து ரூ.34 ஆகவும் விலை குறைந்துள்ளது.
எண்ணெய் விலை குறையவில்லை
இதேபோல், ரூ.70-க்கு விற்பனையான முதல் ரக உளுந்தம் பருப்பு ரூ.64 ஆகவும், பர்மா உளுந்தம் பருப்பு ரூ.66-ல் இருந்து ரூ.59 ஆகவும் விலை சரிந்துள்ளது. பாசி பருப்பு ரூ.70-ல் இருந்து ரூ.63 ஆக விலை குறைந்துள்ளது.
ஆனால், எண்ணெய் வகைகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.48-க்கு விற்பனையான ஒரு கிலோ பாமாயில் ரூ.59 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், ரூ.67-க்கு விற்பனையான ரீபைண்ட் ஆயில் ரூ.75 ஆகவும், ரூ.100-க்கு விற்பனையான தேங்காய் எண்ணெய் (நயம்) ரூ.120 ஆகவும், ரூ.80-க்கு விற்பனையான 2-ம் ரக தேங்காய் எண்ணெய் ரூ.100 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
இதேபோல், ரூ.100-க்கு விற்பனையான அக்மார்க் நல்லெண்ணெய் ரூ.120 ஆகவும், ரூ.60-க்கு விற்பனையான 2-ம் ரக நல்லெண்ணெய் ரூ.75 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.