ராஜசேகர ரெட்டி திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்! - காங்கிரஸ் பெண் எம்எல்ஏ
ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்தில் இறந்தார். இதுபற்றி விசாரணை நடத்திய சி.பி.ஐ. போலீசார் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட விபத்து இது என்று கூறினர். மேலும் ஹெலிகாப்டரில் உள்ள கறுப்பு பெட்டி பேச்சை வெளியிடவும் மறுத்து விட்டனர். இதனால் ராஜசேகர ரெட்டி சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் கூட தனது தந்தை சாவில் உள்ள மர்மம் பற்றி குறிப்பிட்டார். பின்னர் தனது சொந்த ஊரான புலிவெந்தலாவில் நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்திலும், தனது தந்தை சாவில் தனக்கு நிறைய சந்தேகம் இருப்பதாகவும் தான் ஆட்சிக்கு வந்தால் அதில் உள்ள மர்மங்களை கண்டுபிடித்தே தீருவேன் என்று சபதம் செய்தார்.
ஜெகனின் தீவிர ஆதரவாளரான நடிகை ரோஜாவும், ராஜசேகர ரெட்டி சாவில் உள்ள மர்மம் பற்றி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வோம் என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெகனின் தீவிர ஆதரவாளரான கொண்டா சுரேகா ஹைதராபாத்தில் நிருபர்களைச் சந்தித்து, ராஜசேகர ரெட்டியின் சாவில் மர்மம் அடங்கியிருப்பதாகக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பரும் அவரது பாதுகாப்பு ஆலோசகருமான கே.வி.பி. ராமச்சந்திரராவ் தற்போது ஜெகனை விட்டு பிரிந்து காங்கிரஸ் பக்கம் தாவி விட்டார். அவருக்கு ராஜசேகர ரெட்டி கொலை செய்யப்பட்டது நன்கு தெரியும்.
ராமச்சந்திராவை ஒய்.எஸ்.ஆரின் ஆத்மா மன்னிக்காது. ராஜசேகர ரெட்டி இறந்ததும் ஜெகனுக்கு ஆதரவாக 156 எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கியதும் இவர்தான். ஆனால் இப்போது திடீரென காங்கிரசின் தீவிர ஆதரவாளராக மாறி விட்டார்.
ராஜசேகர ரெட்டி பாதுகாப்பில் உள்ள குளறுபடிக்கு இவர்தான் காரணம். ராஜசேகர ரெட்டி கொலையில் யார்-யார்? குற்றவாளிகள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஆந்திராவை ஆளும் தகுதி, திறமை இருந்தும் ஜெகன் மோகன் ரெட்டியை வேண்டுமென்றே ஓரம்கட்டினார்கள். இந்தத் தேர்தலில் ஆந்திர மக்கள் காங்கிரசுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள்", என்றார் சுரேகா.