2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்! - தா பாண்டியன்
மதுரையில் இன்று நிருபர் களிடம் கூறியதாவது:
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக 20 நாட்களாக பாராளுமன்றம் முடக்கப் பட்டு உள்ளது. இது நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். எதிர்கட்சிகளின் அமளியால் சபை ஒத்தி வைக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுவது தவறு. இந்த விவகாரத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முழுவதுமாக ரத்து செய்து விட்டு மறு ஏலம் விட வேண்டும்.
அப்போதுதான் இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வளவு மோசடி நடந்துள்ளது என்பது தெரியவரும். அத்துடன் எம்.பி.க்கள் கூட்டுக்குழு விசாரணை ஏற்படுத்தாத வரை எதிர்கட்சிகளின் போராட்டம் தொடரும்.
சமீபத்தில் பெய்த மழையால் மனித உயிர்களும், கால்நடைகளும் பலியாகின. ஏராளமான விவசாய பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதமடைந்துள்ளன. இந்த சேதத்தை மட்டும் கணக்கிடாமல் பாதிக்கப்பட்ட வர்களின் மறுவாழ்வுக்கு உதவிடக்கூடிய வகையில் மாநில அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் உதவ முன்வர வேண்டும்.
வைகையில் நீர்மட்டம் உயர்ந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரை சேமிக்க 58 கால் வாய் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் அத்திட்டம் முழுமை பெறாததால் தண்ணீர் கடலுக்கு செல்கிறது. காவிரியை பொறுத்த வரை மேட்டூர், கொள்ளிடம் ஆகிய 2 இடங்களில் தண்ணீர் தேக்கப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் மேலும் ஒரு நீர்த்தேக்கத்தை கட்டினால் அது தென் மாவட்டத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
தற்போது கட்டுமான பொருள்களின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. தமிழக அரசு மூல பொருட்களின் விலையை இருமடங்காக உயர்த்தியதாலும், கூடுதல் மின்சாரம் வழங்காததாலும் இந்த விலை ஏற்றம் தடுக்க முடியாததாகி விட்டது என்று சிமென்ட் ஆலை அதிபர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு முழு அளவிலான மின்சாரத்தை மாநில அரசு வழங்கி கட்டுமான தொழில் பாதிக்காத வகையிலும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்காத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக புதிய வீடு கட்டித்தர ரூ.1000 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. ஆனால் 2 ஆண்டுகள் கழித்து அடிக்கல் நாட்டப்பட்டதால் பணிகளும் தாமதமாகி வருகின்றன. உலக நாடுகள் அனைத்தும் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து வருகிறது. இந்திய அரசும் அவரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்...", என்றார்.