காங்.கில் சேர வந்த விஜய்யை வழியில் வந்தவர்கள் கூட்டிப் போய் விட்டனர்-இளங்கோவன்
திருப்பூர்: நடிகர் விஜய்யும், நடிகை குஷ்புவும் காங்கிரஸில் சேரவே வந்தனர். ஆனால் வழியில் வந்தவர்கள் அவர்களை அவர்களது கட்சிக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டனர் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகேயுள்ள செங்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நின்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இன்று நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.
குஷ்பு, விஜய் போன்ற நடிகர்கள் காங்கிரசில் சேர வந்தார்கள். ஆனால் வழியில் வந்தவர்கள் தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்று விட்டார்கள். இருந்தாலும் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பாதுகாப்பாக இருக்கும்.
நெல், கரும்பு, ராகி போன்ற விவசாயத்துக்கு மட்டும்தான் இலவச மின் மோட்டார் தருவதாக கூறுகிறார்கள். அப்படியானால் தக்காளி, காய்கறிகள், பழம், தென்னை விவசாயிகள் என்ன செய்வார்கள்?
கடந்த 31.3.2000-ம் ஆண்டு வரை பதிவு செய்துள்ள 20 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருகின்றனர். இணைப்பு தருவதற்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளால் 20 ஆயிரம் பேர் கூட இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரசில் இளைஞர்கள் ஆர்வத்துடன் சேர்ந்து வருகிறார்கள். இதுவரை 14 லட்சம் பேர் இளைஞர் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். இளைஞர்கள் அனைவரும் காங்கிரசை விரும்பி ஆதரித்து தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் என்றார் இளங்கோவன்.