பஸ் எரிப்பு வழக்கு-மதானி மனைவி உள்பட 13 பேரை விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி
திருவனந்தபுரம்: தமிழக பேருந்து எரிப்பு வழக்கில் மதானியின் மனைவி சூபியா மதானியிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து சேலம் புறப்பட்ட தமிழக அரசுப் பேருந்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இந்த வழக்கை முதலில் உள்ளூர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட மதானியை விடுதலை செய்ய அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. என்ஐஏ நடத்திய விசாரணையில் பேருந்து எரிப்பு சம்பவத்தில் மதானி மனைவி சூபியாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு சூபியா கைது செய்யப்பட்டார்.
வழக்கில் அவரை 10வது குற்றவாளியாக சேர்த்தனர். இந்நிலையில் சூபியா உள்பட 13 பேரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி மத்திய அரசிடம் என்ஐஏ அனுமதி கோரியது. இந்த சம்பவம் நடந்த அன்று பேருந்து எரிப்பில் ஈடுபட்டவர்களிடம் சூபியா போனில் பேசிய முக்கிய ஆவணங்களையும் மத்திய அரசிடம் என்ஐஏ சமர்ப்பித்துள்ளது.
இதையடுத்து மதானி மனைவி உள்பட 13 பேரிடமும் விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கிடையே கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.