நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்-இன்று 9வது ஆண்டு நினைவுதினம்
நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சி எம்.பிக்களும், தாக்குதலின்போது உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி நாட்டையே அதிர வைத்தனர். பிரதமர் உள்ளிட்டோரை கடத்தும் நோக்குடன்ஊடுறுவிய அவர்களை பாதுகாப்புப் படையினர் தீரத்துடன் போராடி சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் உள்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் சூழல் உருவானது. இருப்பினும் இந்தியா அமைதி காத்து போர் தொடுக்காமல் விட்டு விட்டது. பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்காமல் விட்டதால் அமெரிக்கா அதிருப்தி அடைந்ததாக சமீபத்தில் வெளியான விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்சல் குரு உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனு இன்னும் பரிசீலனையில் உள்ளதால் அவர் தூக்கிலிடப்படாமல் உள்ளார்.
இந்தப் பின்னணியில் இன்று நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் 9வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.