இலங்கை போர்க்குற்றம்-சர்வதேச விசாரணைக்கு கோரி 47 யு.எஸ். எம்.பிக்கள் ஹில்லாரியிடம் மனு
இதுதொடர்பாக அவர்கள் ஹில்லாரியிடம் ஒரு மனுவையும் அளித்தனர். இந்த 47 பேரில் 17 பேர் செனட் உறுப்பினர்கள், 30 பேர் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது பெருமளவில் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் உள்ளிட்டவற்றில் அந்த நாட்டு ராணுவமும், ராணுவ ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன. எனவே இதுகுறித்து இலங்கை அரசு நடத்தி வரும் விசாரணையை நம்ப முடியாது. எனவே சர்வதேச அமைப்பின் விசாரணைக்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஷெர்ராட் பிரவுன், ரிச்சர்ட் பர் ஆகியோர் தலைமையிலான செனட் உறுப்பினர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அரசு அமைத்துள்ள கமிஷன்களின் விசாரணை முடிவுகளை ஐ.நா. ஆதரவுடன் கூடிய சர்வதேச அமைப்பின் மூலம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கை அரசு கூறுவதை அப்படியே ஏற்கக் கூடாது.
ஐ.நா. ஆதரவுடன் கூடிய பரிசீலனை இல்லாமல் எந்த முடிவையும் ஏற்க இயலாத நிலையே தற்போது உள்ளது. காரணம், இலங்கை அரசு மீதான நம்பகத்தன்மை சற்றும் இல்லாததே
இலங்கை அரசு போருக்குப் பிறகும் கூட அமைதியை தழுவச் செய்ய தவறி விட்டது. கடந்த காலங்களில் இலங்கையில் நடந்த தோல்விகளையும் நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதேபோல டேனி டேவிஸ், ஜான் ஸ்கவஸ்கி ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவர் பொறுப்பில் அமெரிக்கா உள்ளது. இதைப் பயன்படுத்தி இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களின் உண்மையை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும். ஈழப் போரின் கடைசி கட்டங்களில் பெருமளவில் மனித உரிமை மீறல் சம்பவங்களும், படுகொலைகளும் நடந்துள்ளதாக ஆணித்தரமாக எடுத்து வைக்கப்படும் வாதங்களைப் புறக்கணித்து விட முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, பொன்சேகா ஆகியோர்தான் காரணம் என்று அமெரிக்க தூதர், வெளியுறவு அமைச்சகத்திற்கு எழுதிய ரகசியக் கடிதம் சமீபத்தில் விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டது. அதேபோல, கருணா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ராணுவம் மற்றும் ராஜபக்சேவின் முழு ஆதரவுடன் படுகொலைகள், ஆள் கடத்தல், மிரட்டல், பணம் பறித்தல் மற்றும் ராணுவத்தினருக்கு பெண்களை அனுப்பி வைத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக இன்னொரு ரகசிய தகவலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இந்தப் பின்னணியில் ஹில்லாரிக்கு அமெரிக்க எம்.பிக்கள் 47 பேர் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.