வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை : தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்யும்
சென்னை: தமிழகத்தில் தற்போது சற்று மழை குறைந்துள்ளது. இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் இலங்கை கரைக்கு அப்பால் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தனது முழு பலத்தையும் காட்டிவிட்டது. பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மழைக்கு 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மின்சாரம் தாக்கி, இடி விழுந்து, வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமான கால்நடைகள் இறந்தன. வெளள நீரில் பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ள சேதத்தை மத்திய குழு பார்வையிட்டு வருகின்றது. தற்போது மழை குறைந்துள்ளதால் மக்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இந்நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும், அதனால் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மக்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது,
தென்மேற்கு வங்க கடலில் இலங்கை கரைக்கு அப்பால் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதவையில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும். சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம். மற்றபடி வானம் மேகமூட்டமாகக் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றார்.