எம் சி ராஜா ஹாஸ்டல் மாணவர்கள் திடீர் சாலை மறியல்... அண்ணா சாலை ஸ்தம்பித்தது!
ஆதி திராவிடர் நலத்துறை மூலம் நடத்தப்படும் எம் சி ராஜா விடுதியில் நகரில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர்.
விடுதியில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், சுகாதாரமான, தரமான உணவு தயாரித்து தர வேண்டும், உடற்பயிற்சி கூடம் வேண்டும், கம்ப்யூட்டர் வசதி செய்து தர வேண்டும், மாணவர்களுக்கு ஒதுக்கும் நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை வற்புறுத்தி இன்று காலை 9 மணிக்கு மாணவர்கள் திடீர் சாலை மறியலில் குதித்தனர். 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு வந்து அண்ணா சாலையின் இரு பக்கங்களிலும் அமர்ந்து கொண்டனர். இதனால் அந்த பாதையில் முற் றிலும் போக்குவரத்து தடைபட்டது.
இதனால் தேனாம்பேட்டை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நந்தனம் சிக்னலில் இருந்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள் சர்தார் பட்டேல் ரோடுவழியாக திருப்பி விடப்பட்டன. இந்த சாலைகள் குறுகிய பாதை என்பதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை 9 மணிக்கு சாலை மறியல் தொடங்கியதால் அந்த நேரத்தில் ஏராளமானோர் அலுவலகம் மற்றும் கல்லூரி, பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மறியலில் சிக்கி கொண்டனர். பின்னர் கடும் அவதிக்கு இடையே தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றனர்.
மறியல் பற்றி அறிந்ததும் தெற்கு பகுதி போலீஸ் இணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். மாணவர்களை கலைந்து செல்லும் படி கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.
அதை தொடர்ந்து ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர் சிவசங்கர் வந்தார். அவர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார். ஆனாலும் மறியலை கைவிடவில்லை.
அதை தொடர்ந்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி மறியல் நடந்த இடத்துக்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே கலைந்தனர். உடனடியாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் தொடங்கிய மறியல் மதியம் 1 மணிக்கும் மேலும் நீடித்தது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான நிலை உருவானது.