ஸ்பெக்ட்ரம்: ராசாவிடம் சிபிஐ நாளை விசாரணை!
சிபிஐ முன் ஆஜராவதற்காக ராஜா நேற்றிரவே டெல்லி வந்துவிட்டார்.
சமீபத்தில் டெல்லி, சென்னை, பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டிலும், உறவினர்கள், நண்பர்கள், பினாமிகள் எனக் கருதப்படுவோரின் வீடுகளிலும், நிரா ராடியா வீடு-அலுவலகங்களிலும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த ஆதாரங்களி்ன் அடிப்படையில் ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.
குறிப்பாக ராசாவின் தனிச் செயலாளராக இருந்த தொலைத் தொடர்புத்துறையின் மூத்த அதிகாரியான சந்தோலியா, இன்னொரு அதிகாரியான ஏ.கே.ஸ்ரீவத்சவா ஆகியோரை சிபிஐ விசாரித்தபோது அவர்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் ராசாவுக்கு எதிராக உள்ளதாகக் கருதப்படுகிறது.
ராசாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் கரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் ராசாவின் குடும்பத்தினருக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான வழக்கில் சிபிஐயும் அமலாக்கப் பிரிவினரும் பிப்ரவரி 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சிபிஐ விசாரணைகள் வேகம் பிடித்துள்ளன.