தக்காளி விலையும் உயர்ந்தது.. கிலோ ரூ 50-க்கு விற்பனை!
வெங்காயம் செஞ்சுரி போட்டது விலையில். அடுத்த முக்கிய காய்கறியான தக்காளி அரை சதத்தை நெருங்கியுள்ளது.
வெங்காயம் விலையும் தக்காளி விலையும் சீஸனுக்கு சீஸன் தாறுமாறாக உயர்வதும் திடீரென குறைவதுமாக உள்ளது.
கடந்த சில தினங்களாக பொதுமக்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு கிலோ ரூ 100 வரை விற்கப்பட்டது வெங்காயம். இப்போது மத்திய அரசின் முயற்சியால் ரூ 40 - 50 ஆகக் குறைந்துள்ளது.
ஆனால் இன்னொரு பக்கம், தக்காளியின் விலையும் எகிற ஆரம்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
இதில் தக்காளி உள்பட பல காய்கறி செடிகள் அழுகி சேதம் அடைந்ததால் விளைச்சல் குறைந்து விட்டது.
ஆங்காங்கே உள்ள சில் லறை மளிகை கடைகளில் அவர்கள் விருப்பப்படி விலை வைத்து விற்கிறார்கள். வெங்காய விலையில் இருந்து மீண்ட மக்களுக்கு இப்போது தக்காளி விலை உயர்வு அதிர்ச்சியை கொடுக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.20- க்கு விற்கப்பட்ட தக்காளி விலை தினமும் 2 ரூபாய், 3 ரூபாய் கூடி கொண்டே வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ரூ.30- ல் இருந்து ரூ.34 வரை விற்கப்பட்டது. ஆனால் இன்று சில்லறை கடைகளில் கிலோ தக்காளி ரூ.46 முதல் 50 வரை விலை வைத்து விர்கப்படுகிறது.
தக்காளி வரத்து குறைவாக உள்ளதால் மேலும் விலை உயரும் என்று வியாபாரிகள் பயமுறுத்தி வருகிறார்கள்.