காமன்வெல்த் போட்டி ஊழல்-சுரேஷ் கல்மாடி, செயலாளர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு
எல்லா முக்கிய வழக்கிலும் படு தாமதமாக செயல்படுவது, ரெய்டு நடத்து என்பது தற்போதை சிபிஐ ஸ்டைலாக மாறியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வெடித்து பல காலம் கடந்த நிலையி்ல சமீபத்தில்தான் உச்சநீதிமன்றத்திடம் செமத்தியாக திட்டு வாங்கிய பின்னர் ரெய்டுகளை முடுக்கி விட்டது.
இந்த நிலையில் காமன்வெல்த் போட்டி விவகாரத்திலும் தற்போதுதான் ரெய்டுகளை முடுக்கி விட்டுள்ளது.
இன்று காலை டெல்லி, புனேவில் உள்ள சுரேஷ் கல்மாடியின் வீடுகள், அலுலவகங்களில் ரெய்டுகளை தொடங்கியது சிபிஐ.
இந்த சோதனைக்குப் பின்னர் கல்மாடியிடம் சிபிஐ விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள காமன்வெல்த் போட்டி தலைமையகம் உள்பட நான்கு இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
கல்மாடியின் தனிச் செயலாளர் மனோஜ் போரேவின் புனே வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.
சோதனை மற்றும் விசாரணைக்குப் பின்னர் இன்று மாலையே கல்மாடி மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. இதுவரை அவர் மீது ஒரு வழக்கும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் போட்டி வில்லேஜ், ஜவஹர்லால் நேருஸ்டேடியம் ஆகியவற்றுக்கும் சிபிஐ குழு சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவின்போது அனைவரையும் கவர்ந்த ஹீலியத்தால் நிரப்பப்பட்ட பலூனான ஏரோஸ்டேட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்யவுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 38 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கில் ஏற்கனவே கல்மாடியின் உதவியாளர்களான மொஹீந்தரு, தர்பாரி, ஜெயச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
இங்கிலாந்தில் தொடங்கிய க்வீன்ஸ் பேட்டன் நிகழ்ச்சியில் முறைகேடுகள், இந்திய தூதரகத்திலிருந்து வந்த மெயில்களைத் திருத்தி மோசடி செய்தது,
மார்க்கெட் விலையை விட அதிக மடங்கு விலைக்கு டிரெட்மில் போன்றவற்றை வாங்கியது, பெரும் கமிஷன் பெற்றுக் கொண்டு ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டது, ஹீலியன் பலூனை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக தொகைக்கு அனுமதித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கல்மாடி மீது உள்ளது.