ராஜாவிடம் இன்று 2வது நாளாக 7 மணி நேரம் சிபிஐ விசாரணை
ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, 2008-ல் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா கடந்த மாதம் 14-ந் தேதி விலகினார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க வேண்டியதிருப்பதால் நேரில் ஆஜராகுமாறு ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதை ஏற்று ஆ.ராசா நேற்று டெல்லி லோதி சாலையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
ஆ.ராசாவிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர் சிபிஐ அதிகாரிகள். அதற்கு ராசா அளித்த பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. ஆ.ராசாவின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுப் பெற்றுள்ளது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு
எட்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராசா, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகத் தெரிவித்தார்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு என்னால் வேறு எதுவும்கூற முடியாது என்று கூறிவிட்டு நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சென்று விட்டார்.
டேப், டைரி ரகசியங்கள்:
குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை காட்டும்படி ராசாவிடம், நீரா ராடியா பேரம் நடத்திய தொலைபேசி உரையாடல் அடங்கிய டேப்புகள் சிபிஐ வசம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு வாரங்களுக்கு முன்பு ராசாவின் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது 3 டைரிகள் சிக்கின. அதில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தமிழிலும், ஆங்கிலத்திலும் பல்வேறு ரகசிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
டேப், டைரி தகவல்களின் அடிப்படையில் ராசாவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று 7 மணி நேரம் விசாரணை:
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) இரண்டாவது நாளாக ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதற்காக காலை 9 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்துக்கு ஆ.ராசா வந்தார்.
உடனடியாக அவர் சி.பி.ஐ. தலைமை அலுவலக 2-வது மாடிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு உடனடியாக விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
ராஜாவுடன் அவரது தனிப்பட்ட டாக்டரும் உடன் வந்திருந்தார். முதலில் டாக்டரை வரவேற்பறையில் அதிகாரிகள் உட்கார வைத்தனர். பின்னர் விசாரணையின்போது அவரையும் உடன் வைத்துக் கொண்டனர்.
விசாரணைக்குப் பின்னர் ராஜா வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணை தொடர்வதால் எந்தத் தகவலையும் தர முடியாது. சிபிஐ அதிகாரிகளுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன் என்றார்.
ராஜா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் தொடர்பாக இன்று முக்கிய விசாரணை நடந்ததாக தெரிகிறது. ராஜாவுக்கு நெருக்கமானவர்களுக்கு போன பணம் தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியாவில் நிலக்கரிச் சுரங்கங்களில் முதலீடு செய்திருப்பதாக சிபிஐ சந்தேகிக்கிறது.
ராஜாவின் முன்னாள் உதவியாளர்களான ஆர்.கே.சந்தோலியா, ஏ.கே.ஸ்ரீவத்சவா ஆகியோர் இந்த வழக்கில் அப்ரூவர்களாக மாறுவார்கள் என்று தெரிகிறது. அவர்களோடு ஹவாலா புரோக்கர் தெளலத் ஜெயினும் அப்ரூவராக மாறக் கூடும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.