சிரஞ்சீவி பாதயாத்திரை... தற்கொலை செய்து கொண்டோர் குடும்பங்களுக்கு ஆறுதல்
ஹைதராபாத்: மழையால் விவசாயம் பாதிக்கப்பட்ட ஆந்திர விவசாயிகளுக்கு, தமிழக விவசாயிகளுக்குத் தருவதைப் போல அதிக நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் சிரஞ்சீவி.
மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்ட ஆந்திர விவசாயிகளுக்கு ஆறுதல் கூற பாத யாத்திரை தொடங்கியுள்ளார் நடிகரும் பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி.
ஆந்திராவில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் குண்டூர், பிரகாசம் உள்ளிட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதனால் நஷ்டம் அடைந்த 85 விவசாயிகள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்களுக்கு ஆறுதல் கூற இன்று நடிகர் சிரஞ்சீவி குண்டூரில் யாத்திரை தொடங்கினார். அவரது பிரஜா ராஜ்ஜியம் கட்சி சார்பில் 85 விவசாய குடும்பங்களுக்கும் தலா ரூ.20 ஆயிரம் வழங்குகிறார்.
இன்றைய யாத்திரையின் போது விவசாயி வெங்கடேஷ வரலு குடும்பத்திற்கு ரூ.20 ஆயிரம் வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
ஆனால் ஆந்திர அரசு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,400 மட்டும்தான் வழங்குகிறது. இது அவர்களுக்கு போதாது. ஆந்திர அரசு தமிழகம் போல் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்", என்றார்.
அவரிடம் நிருபர்கள், உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ஜெகன்மோகன் ரெட்டி அணிக்கு தாவி இருப் பது பற்றி என்ன சொல்கிறீர் கள்?" என்றனர்.
இதை கேட்டதும் எரிச்சல் அடைந்த சிரஞ்சீவி, மற்ற கட்சிகளில் இருந்துதான் நிறைய பேர் ஜெகன் அணிக்கு தாவியுள்ளனர். அவர்களிடம் போய் முதலில் இந்த கேள்வியை கேளுங்கள் என்றார் கடுப்புடன்.