சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கவில்லை-அடையாறு பூங்காவை பிரதமர் திறக்க மாட்டார்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைப்பதற்காக பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுமம் இந்தப் பூங்காவை அமைப்பதற்கான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தது.
ஆனால், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்பொழுது வரை பெறப்படாததால் பிரதமர் ஜனவரி 3ம் தேதி இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதாக சென்னைக்கு வரும்போது, பூங்கா திறப்பு நிகழ்ச்சியை சேர்க்க இயலவில்லை.
எனவே, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின்பு, இந்த பூங்கா திறந்து வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்துக்கு ஆதரவாக நடப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மீது தமிழக அரசு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அடையாறு பூங்காவுக்கு ஒப்புதலைத் தராமல் சுற்றுச்சூழல் துறை இழுத்தடித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இடையே பனிபோர் நடந்து வரும் நிலையில், இந்த திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதியுடன் பிரதமர் பங்கேற்பதாக இருந்தது. இப்போது சுற்றுச்சூழல் துறை அனுமதி தராததை காரணம் காட்டி இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.