சென்னை மாநகராட்சி விரிவாக அனுமதி தீர்மான நிறைவேற்றம் திடீர் ஒத்திவைப்பு
இதுகுறித்து மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவில் முக்கிய பெருநகரமான டெல்லி பெருநகரத்தின் பரப்பளவு 1483 ச.கி.மீ., மக்கள்தொகை 137.82 லட்சம். மும்பை பெருநகரத்தின் பரப்பளவு 437.71 ச.கி.மீ., மக்கள் தொகை 119 லட்சம்.
கொல்கத்தா பெருநகரத்தின் பரப்பளவு 187.33 ச.கி.மீ., மக்கள் தொகை 45.80 லட்சம். பெங்களுர் பெருநகரத்தின் பரப்பளவு 800 ச.கி.மீ., மக்கள்தொகை 84 லட்சம். ஹைதராபாத் பெருநகரத்தின் பரப்பளவு 625 ச.கி.மீ., மக்கள்தொகை 54.90 லட்சம்.
விரிவாக்கப்பட உள்ள சென்னையின் பரப்பளவு 430 ச.கி.மீ., மக்கள்தொகை 56.63 லட்சம். சென்னை மாநகராட்சியுடன் 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டு, அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் தற்பொழுது 155 வார்டுகள் உள்ளன. அவற்றை 40 ஆயிரம் மக்கள்தொகை கணக்கில் கொண்டு 107 வார்டுகளாகவும், நகராட்சிகளில் 20 ஆயிரம் மக்கள்தொகை கணக்கில் கொண்டும், ஊராட்சிகளில் 10 ஆயிரம் மக்கள்தொகை கணக்கில் கொண்டு மொத்தம் 200 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட உள்ள சென்னை புறநகர்ப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால்வாய் பணிகள், சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள், திடக்கழிவு மேலாண்மை, பேருந்து நிறுத்த வசதிகள் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ. 3871.65 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்புவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு எதிர்க்காலத்தில் குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே மாநகராட்சி விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விரிவாக்கம் செய்யப்படக்கூடிய எல்லைகளின் விவரங்கள், தெருக்களின் விவரங்கள் போன்றவை சரியாக தெரிய வேண்டும் என மன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்க தீர்மானம் ஒத்திவைக்கப்படுகிறது என மேயர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.