பீகார் தேர்தலை விட தமிழகத்தில் கடுமையான கண்காணிப்பு அமல்பபடுத்தப்படும்-தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி
சென்னையில் நேற்று சட்டசபைத் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கூட்டத்தில் கலந்து கொண்டார் குரேஷி. பின்னர் அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
காலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினோம். அப்போது அரசியல் கட்சியினர் தனித்தனியாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கடந்த தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமாகவும், நியாயமற்ற முறையிலும் நடந்து கொண்டதாக தெரிவித்தனர். அவர்கள் நடுநிலையாக செயல்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்கள்.
தமிழகத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்றும், வேட்டி, சேலை, சாராயம் போன்றவை இலவசமாக கொடுக்கப்பட்டன என்றும் அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
அரசியல் கட்சியினரைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் ஆலோசனை நடத்தினோம். கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தோம்.
பின்னர் தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது தேர்தல் அதிகாரிகள் பணியிடம் காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி, அதை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தோம். அதற்கு தலைமை செயலர் எஸ்.மாலதி கூறுகையில், தேர்தல் அதிகாரிகள் பணியிடங்களை விரைவில் நிரப்பி விடுவோம் என்று உறுதி அளித்தார்.
அதுபோல 5 ஆயிரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதையும் நிரப்ப வேண்டும் என்று தெரிவித்தோம். அந்தப் பணியிடங்களை விரைவாக நிரப்பி, புதிய சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தெரிவித்திருக்கிறார்.
மதுரையில் அரசியல் கட்சியினருக்கு போலியாக புகைப்பட அடையாள அட்டை தயாரித்துக் கொடுத்ததாக வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டது. இது பற்றி பத்திரிகையிலும் செய்தி வெளியானது. அது பற்றி விசாரித்த போது இந்த குற்றத்தை 2 வாக்குச்சாவடி அதிகாரிகள் செய்தது கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை 20 சதவீதம் முதல் 25 சதவீதம் தொலைந்து விட்டதாக கூறப்பட்டு உள்ளது. இது கவலைக்குரிய விஷயமாகும். இது குறித்து விசாரித்து தகுதியானவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் டூப்ளிகேட் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக ஜனவரி 10-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 99.77 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. 99.68 சதவீதம் பேர் புகைப்பட வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பண பலத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை பின்பற்றினோம். அதன்படி, வேட்பாளர்கள் பெயரில் வங்கியில் தனிக்கணக்கு தொடங்கி அதன் மூலம் தேர்தல் செலவு செய்ய வைத்தோம்.
ஒரு பொதுக்கூட்டம் நடத்த ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்யலாம். இதற்கு அதிகமாக வேட்பாளர் செலவு செய்தால் அது, நிழல் கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்து தவறு கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பீகார் தேர்தலை விட இங்கு கடுமையான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும்
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இதனை தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்ளும். அதே நேரத்தில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளதால் அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, கேரளம், தமிழ்நாட்டில் ஆலோசனை நடத்தியதுபோல, மற்ற மாநிலங்களிலும் ஆலோசனை நடத்துவோம். இந்த 5 மாநிலங்களில், முக்கிய விழாக்கள், பருவ நிலை, சட்டம்-ஒழுங்கு, பள்ளி, கல்லூரிகளின் தேர்வு கால அட்டவணை போன்றவை வேறுபடும். இவை அனைத்தையும் ஆய்வு செய்த பிறகே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தும் தேதி முடிவு செய்யப்படும்.
லத்திகா சரண் குறித்து பரிசீலிப்போம்
போலீஸ் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் இருந்தபோதுதான், சென்னை மாநகராட்சி தேர்தலில் வரலாறு காணாத முறைகேடுகள், வன்முறைகள் நடந்தன. அதனால் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. கோரியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும்.
இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது போல அரசியல் கட்சிகள் தங்களது சொந்த டி.வி.க்களில் இரவு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வதை தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதுபற்றியும் தேர்தல் கமிஷன் பரிசீலித்து முடிவெடுக்கும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுப்போடும்போது எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டேன் என்பதை வாக்காளர் அறிந்து கொள்ளும் வகையில் ரசீது கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கான்பூர், சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.க்களின் பேராசிரியர்கள் உள்பட 5 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து வருகிறது. அவர்களது அறிக்கை கிடைத்ததும் இது குறித்து முடிவெடுக்கப்படும்.
திமுகவின் கோரிக்கை சாத்தியமில்லை
தேர்தல் முடிந்த 2 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. ஒரேநேரத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் இது சாத்தியமில்லை. இல்லாவிட்டால் ஒரு மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த மாநில தேர்தலை பாதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
தேர்தல் பிரசாரத்தின் போது பணம் கொடுத்து, வேட்பாளர் தனக்கு சாதகமாக பத்திரிகை, ஊடகங்களில் செய்தி வெளிவரச் செய்வதை தடுக்க மாவட்ட அளவில் ஊடக குழு அமைத்திருந்தோம். அதில், இந்திய பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றிருந்தார். பணம் கொடுத்த செய்தி வந்திருந்தால் அது, செய்தி அல்ல, விளம்பரம். அந்த விளம்பரத்திற்கான பணம் வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட்டது. இது தொடர்பாக 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்றார் அவர்.