பெங்களூர் நீதிமன்றத்தில் லெனின் கருப்பன் மீது ரஞ்சிதா வழக்கு
பெங்களூர்: கர்நாடக நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் முன்னாள் சீடரான லெனின் கருப்பன் மீது நடிகை ரஞ்சிதா திடீரென வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா இருப்பது போன்ற படுக்கை அறைக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து நித்யானந்தாவின் முன்னாள் சீடரான லெனின் கருப்பன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி, நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாச வீடியோவை தானே எடுத்ததாகவும், நித்யானந்தா தனது பீடத்திற்கு வரும் பல பெண்களிடம் செக்ஸ் தொடர்பு வைத்துள்ளதாகவும், காவி உடை அணிந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் புகார் தந்தார்.
இதையடுத்து சென்னை போலீசார் நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு பெங்களூர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் நடிகை ரஞ்சிதா நேற்று முதன்முதலாக கர்நாடக நீதிமனறத்தில் ஆஜரானார். பெங்களூர் அருகே ராம்நகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்களுடன் வந்த அவர் ரஞ்சிதாவின் சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன், ஆரத்தி ராவ், ஸ்ரீதர் ஆகிய 3 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், ஆபாச படத்தை வெளியிட்டதன் மூலம் அவமானம் ஏற்படுத்தியதாகவும் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நடிகை ரஞ்சிதாவின் மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று ரஞ்சிதா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந் நிலையில் நித்யானந்தாவின் பெங்களூர் பிடுதி ஆசிரமத்தைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண் சீடர் சார்பிலும், லெனின் கருப்பனுக்கு எதிராக ராம்நகர் நீதிமன்றத்தில் இன்னொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவிலும் லெனின் கருப்பன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.