கூட்டணிப் பேச்சு விறுவிறுப்பாகிறது-அதிமுக கூட்டணிக்கு வருமா பாமக, தேமுதிக?
சென்னை: கூட்டணி குறித்து சில நாட்களில் அறிவிப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாகியுள்ளது.
திமுக கூட்டணியைப் பொறுத்தவரை தற்போது அதில் காங்கிரஸும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்தான் பெரிய கட்சிகளாக உள்ளன. புதிய கட்சிகள் ஏதேனும் அங்கு வருகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் பாமக வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதேசமயம், தற்போது அனைவரின் கவனமும் ஜெயலலிதா அமைக்கப் போகும் கூட்டணி குறித்துதான் உள்ளது.
அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இக்கூட்டணியில் மதிமுக, இடதுசாரிகள் ஆகியவை உள்ளன. புதிதாக சில கட்சிகள் வரும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
குறிப்பாக தேமுதிக அதில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீட்டை கூட ஜெயலலிதா ஏற்கனவே முடித்து விட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந் நிலையில் தற்போது பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வரப் போவதாகவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
தேமுதிக இதுவரை கூட்டணி எதிலும் சேராமலேயே போட்டியிட்டு தனது பலத்தை வலுவாக்கி வருகிறது. பாமகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கூட்டணி என்பதை கொள்கையாகவே வைத்துள்ளது.
வடிவேலு பாணியில், 'அது போன மாசம், இது இந்த மாசம்' என்ற ரேஞ்சுக்கு இருக்கிறது பாமகவின் கூட்டணி அரசியல்.
தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் விரும்புகின்றனர். இதனால் இது இயல்பான கூட்டணியாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
ஒரு கூட்டணி வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றால் தலைவர்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல், அடிமட்டத் தொண்டர்கள் மட்டத்திலும் இயல்பான, தோழமை உணர்வு இருக்க வேண்டும். அது அதிமுக, தேமுதிக மத்தியில் நிலவுவதாகவே தெரிகிறது.