குமரி திருவள்ளுவர் சிலைக்கு 1 மாதத்தில் 1 லட்சம் பேர் வருகை
கன்னியாகுமரி: குமரிக் கடலில் கம்பீரமாய் நிற்கும் திருவள்ளுவர் சிலைக்கு கடந்த மாதம் மட்டும் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவற்றை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் குகன், பொதிகை, பகரீதி ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. தற்போது சபரிமலை சீசன் என்பதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனால் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகில் சென்று வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் மட்டும் ஒரு லட்சத்து 5,000 பேர் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்துள்ளனர்.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் குகன், பொதிகை, பாகீரீதி ஆகிய 3 படகுகளில் பாகீரதி படகு வாங்கப்பட்டு 30 வருடங்கள் ஆகிவிட்டதால் அதற்கு பதிலாக புதிய படகை வாங்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து புதிய படகுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.