சட்டசபைத் தேர்தல்-சோ உள்ளிட்டோருடன் ஜெ. ஆலோசனை
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து இது நடந்தது.
இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் உத்திகள், கூட்டணி குறித்து, கூட்டணிக் கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்து இதில் ஜெயலலிதா விவாதித்தார்.
இதேபோல துக்ளக் ஆசிரியர் சோவும், ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்காக 3 பேர் கொண்ட குழுவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கிடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகத்தின் சார்பில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓ.பி தலைமையில் தமிழக குழு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு செயலாளர் ஜெயராமன் ஆகியோரைக் கொண்ட குழு
அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு தம்பித்துரை, செம்மலை
புதுச்சேரி மாநில சட்டமன்ற பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை,. அமைப்புச் செயலாளர் செம்மலை ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு பாலகங்கா, மைத்ரேயன்
கேரள மாநில சட்டமன்ற பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, கழக தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா, மருத்துவ அணி தலைவர் மைத்ரேயன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் குறித்த விவரத்தை வெளியிடுவேன் என ஜெயலலிதா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கான குழுவை அவர் அறிவித்துள்ளார்.
இந்தக் குழு முதல் கட்டமாக மதிமுக, சிபிஎம், சிபிஐ மற்றும் இதர குட்டிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்களை விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. அதன் பின்னர் புதிதாக ஏதாவது கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.