மீண்டும் உயர்ந்தது வெங்காய விலை-மக்கள் அவதி
தங்கம் விலைக்கு நிகராக சமீபகாலமாக வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெங்காய விளைச்சல் குறைந்ததாலும், பற்றாக்குறை ஏற்பட்டதாலும், பெருமளவிலான வெங்காயத்தை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ததாலும் உள்ளூரில் வெங்காயத்திற்குப் பெரும் பற்றாக்குறையாகி விட்டது.
இதனால் டெல்லி முதல் சென்னை வரை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்தது. கிலோ வெங்காயம் ரூ. 100 வரை விற்கப்பட்டது. சில இடங்களில் இதை விட அதிகமாகவும் இருந்தது. இதனால் வெங்காயத்தைப் பார்த்தாலே வெடிகுண்டைப் பார்ப்பது போல மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலையில் விலையைக் குறைக்கும் முகமாக பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது மத்திய அரசு. மாநில அரசுகளும் விலையைக் குறைக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டன. இதன் விளைவாக ஏறிய விலை சற்று குறைந்தது. கிலோ வெங்காயம் ரூ. 40 வரைக்கும் குறைந்தது.
ஆனால் தற்போது மீண்டும் வெங்காய விலை உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் பல இடங்களில் கிலோ வெங்காயம் ரூ. 80 வரை விற்கப்படுகிறது. சில இடங்களில் ரூ. 100க்கும் (இது சற்றுப் பெரிதாக இருப்பதால் இந்த விலையாம்) விற்கப்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் கவலை அடைந்துள்ளனர்.
மீண்டும் வெங்காயப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால்தான் இந்த விலை உயர்வு என்கிறார்கள் வியாபாரிகள்.
வெங்காயம் மட்டுமல்லாமல் தக்காளி விலையும் கூட அதிகமாகவே உள்ளது. அதேபோல கேரட் விலையும் உயர்ந்தவண்ணம் உள்ளது. பொதுவாகவே காய்கறிகளின் விலை சற்று அதிகம்தான்.
எதைத் தொட்டாலும் ஷாக் அடிப்பதால் எதை வாங்குவது, எப்படிச் சாப்பிடுவது என்று தெரியாமல் மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.