தெலுங்கானா அமையாவிட்டால் ராஜினாமா:25 காங். எம்.எல்.ஏ.க்கள், 11 எம்.பி.க்கள் மிரட்டல்
தெலுங்கானா மாநிலம் அமைப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி சமர்பித்த அறிக்கை பற்றி விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வரும் 6-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
ஆந்திராவில் இருந்து பிரித்து தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென்று காங்கிரஸைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள், 11 எம்.பி.க்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று மாலை இவர்கள் இந்த பிரச்சனை குறித்து ஹைதராபாத்தில் உள்ள விவேக் எம்.பி. வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது தெலுங்கானா தனி மாநிலமாகாத பட்சத்தில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.
இது தவிர நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தெலுங்கானா தனி மாநில மசோதா ஒன்றை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி., எம். எல்.ஏ.க்களின் இந்த திடீர் முடிவால் ஆந்திர அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடம் இவர்களை சமாதானம் செய்ய முயற்சித்து வருகிறது.
அடுத்த மாதம் கட்சி பெயர் அறிவிக்கும் ஜெகன்:
இதற்கிடையே காங்கிரஸில் இருந்து பிரிந்து தனி பெரும் பலமாக மாறி வரும் ஜகன்மோகன் ரெட்டி அடுத்த மாதம் முதல் வாரத்தில் தனது புதுக் கட்சியின் பெயரை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அவர் கூறியதாவது,
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் என் தந்தை ராஜசேகர ரெட்டியின் சமாதியில் வைத்து நான் துவங்கும் கட்சியின் பெயரை அறிவிப்பேன். வரும் இடைத்தேர்தலில் நான் கடப்பாவில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். புலிவெந்துலாவில் யார் போட்யிடுவார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
எனக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 28 பேர் பகிரங்கமாக ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் மறைமுகமாக பல எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆந்திர அரசை கவிழ்க்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. நான் அப்படி செய்யவும் மாட்டேன். அவ்வாறு செய்வது என்று நான் நினைத்திருந்தால் கடந்த 2009-ம் ஆண்டே செய்திருப்பேன்.
ஆந்திர மக்கள் எனக்கு பக்கபலமாக இருக்கின்றனர். இனி ஆந்திராவில் காங்கிரஸுக்கு 3-வது இடம் தான். வரும் 2014-ம் ஆண்டு தேர்தலில் எனது பலத்தை காட்டுவேன் என்றார்.
ஜெகன்மோகன் ரெட்டி இன்று விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆறுதல் யாத்திரை மேற்கொண்டார்.